பகவதி அம்மன் கோவிலில், ஆடி களப பூஜை இன்று தொடங்குகிறது..

By 
bhagavathi2

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில், ஆடி மாதத்தில் களப பூஜை 12 நாட்கள் நடைபெறுகிறது. 

அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று திங்கட்கிழமை தொடங்குகிறது. 

இன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், அதன் மடாதிபதி திருக்கயிலாய பரம்பரை 24-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சாமி கோவிலுக்கு வழங்கும் தங்க குடத்தில் சந்தனம், களபம், ஜவ்வாது, பன்னீர் மற்றும் பல வாசனை திரவியங்கள் கலந்து நிரப்பி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 

பின்னர் அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீர் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. 

அதன்பிறகு, மேளதாளம் மற்றும் பஞ்சவாத்தியங்கள் முழங்க தங்க குடத்தை கோவில் மேல்சாந்திகள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மன் எழுந்தருளியிருக்கும் கருவறைக்குள் கொண்டு செல்கிறார்கள். 

அங்கு, தங்க குடத்தில் நிரப்பப்பட்ட களபத்தினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இந்த களப அபிஷேகத்தை மாத்தூர் மட தந்திரி சங்கர நாராயணரூ நடத்துகிறார். 

வைரக்கிரீடம் :

பின்னர், அம்மனுக்கு வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி மற்றும் தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, சந்தனக் காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

அதனைத்தொடர்ந்து, 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடக்கிறது. 

மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், இரவு 7 மணிக்கு அம்மனுக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறுகிறது. 

இரவு 8.30 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருளச் செய்து கோவிலின் உள் பிரகாரத்தை சுற்றி மேள தாளம் முழங்க 3 முறை வலம் வரச் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. 

அதன்பிறகு, வெள்ளி சிம்மாசனத்தில் அம்மனுக்கு தாலாட்டு நிகழ்ச்சியும், அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடைபெறுகிறது. 

களப அபிஷேகம் :

அதேபோல, நாளை 2-ந்தேதி முதல், 12-ந் தேதி வரை தொடர்ந்து காலை 10 மணிக்கு அம்மனுக்கு களப அபிஷேகம் நடக்கிறது. 

இந்த களப பூஜை நிறைவடைந்த பிறகு, மறுநாள் 13-ந் தேதி காலை 10 மணிக்கு உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் நடைபெறுகிறது.
*

Share this story