தாணுமாலயசாமி கோவிலில் ஆவணி திருவிழா : 10-ந் தேதி தேரோட்டம்
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலய சாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையொட்டி கொடி பட்டம் கோவில் சுற்றுப்பிரகாரத்தில் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சன்னதி முன்பு மேள, தாள, பஞ்ச வாத்திய வெடி முழக்கத்துடன் கொடியேற்றப்பட்டது.
கொடிப்பட்டத்தை மாத்தூர் மடம் தந்திரி சஜித் நாராயணரூ கொடிமரத்தில் ஏற்றினார். பின்னர் கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அலங்கார தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது.
திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனியும், 9-ம் திருவிழாவான வருகிற 10-ந் தேதி மாலை 5 மணிக்கு இந்திரன் தேராகிய சப்பர தேரில் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை அமர செய்து நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறுகிறது.
10-ம் திருவிழாவான 11-ந் தேதி திருஆராட்டு வைபவம் நடக்கிறது