மார்கழி மாத கோலங்கள் : சில அரிய தகவல்கள்..

By 
marg

மார்கழி மாதம் மகத்துவமானது. மார்கழி முதல் நாளிலிருந்து 30 நாட்களும், பெண்கள் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்து விட்டு, வாசல் தெளித்து கோலமிட்டு அந்த கோலத்தின் மீது அழகாய் பரங்கிப்பூக்களை வைத்து அழகுபடுத்துவார்கள். இந்த கோலத்தை பார்த்தால் அன்னை மகாலட்சுமியே அந்த வீட்டிற்குள் போய் குடியேறுவாள் என்பது ஐதீகம். 

அது மட்டுமல்ல. மார்கழி மாதத்தில் பூசணி பூவானது அதிகமாக பூக்கும் என்பதால், இந்த பூவினை  முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். கோலம் போடுவதால் மனதுக்கு உற்சாகம்,  நினைவாற்றல் எல்லாம் கிடைக்கிறது. கோலம் இடுதல் ஒரு கலை. இதில் ஒரு ஆரோக்கிய ரகசியமும் ஒளிந்துள்ளது. 

கோலம் இடுவதற்காக காலையில் எழுவது உடலுக்கும் , மனதிற்கும் நல்லது. கோலங்கள் போடாத வீடுகளில் கூட மார்கழி மாதத்தில் கோலமிட்டு நடுவில் பசுஞ்சாண உருண்டையை வைத்து அதில் பரங்கி பூவினை வைப்பார்கள். 

பூக்கள் அதிகமாக பூக்காத இடங்களில், பரங்கி பூவிற்கு பதிலாக ஒரு பூசணிக்காய் பூவையாவது வைத்திருப்பார்கள். இப்போது செம்பருத்திப் பூக்களை அதிகம் வைக்கின்றனர். மேலும், கோலம் இடுபவருக்கும் மற்றவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது என்றால் மிகையில்லை. 

கிராமப்புறங்களில் இன்றும் அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்துகோலம் இடுவதைப் பார்க்கலாம். தமிழர்களின் கலை நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக கோலம் விளங்குகிறது. தமிழ் பெண்களுள் இயற்கை யாகவோ தாய் வழியாகவோ இக்கலையை கற்றுக்கொள்கிறார்கள். 

திருவிழாக்களில் முதன்மையான இடத்தை கோலம் பிடிக்கிறது. இறை வழிபாட்டிலிலும், வீட்டின் மங்கள விழாக்களிலும் , பள்ளி கல்லூரி விழாக்களிலும் கோலமிடும் பழக்கம் இருக்கிறது. 

முக்கியமாக தமிழர்களின் திருவிழாவான பொங்கல் திருநாளுக்கு முன், மார்கழி மாதத்தில் வரும் 30 நாட்களும் வாசலில் பெரிய கோலமிடுவது வழக்கம். அதிகாலையில் பெண்கள், வீடுகளில் மாட்டு சாணம் தெளித்து , கோலமிட்டு மார்கழி மாத நாளை வரவேற்பர். 

மற்றும் மார்கழி மாதம் முழுவதும் தினசரி கோலத்தின் நடுவே சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து மலர்களால் கோலத்தை அலங்கரித்தனர். கோலத்தின் மீது தீபங்கள் வைத்தும் மார்கழி மாதத்தை வரவேற்றனர். 

இதையடுத்து , மார்கழி மாதம் 30 நாட்கள் கோலமிட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து வைத்ததை தைப் பொங்கல் திருநாளில், பிள்ளையார் பொங்கல் வைத்து பிள்ளையார்களை வைத்து வழிபட்டு, பின்னர் தண்ணீர் இருக்கும் இடமான ஆற்றிலோ , குளத்திலோ கொண்டு சென்று சாண பிள்ளையார்களை விட்டு வருவர். 

Share this story