சனி தோஷமா? கவலை வேண்டாம்; இதோ நல்ல தீர்வு..
ஒருவரின் சந்திரன் நின்ற ராசிக்கு, முன் ராசியிலும், பின் ராசியிலும், சந்திரன் நின்ற ராசியிலும் சனீஸ்வரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் ஏழரைச் சனியாகும்.
அந்த மூன்று வீடுகளிலும் தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச் சனியாகும்.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச் சனி என்பார்கள். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகள் என்று நஷ்டமாகவே அக்காலம் இருக்கும்.
அடுத்த பகுதியை ஜென்மச் சனி என்பார்கள். அதாவது ராசியை சனி பகவான் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை கழிவு சனி என்பார்கள். அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைந்ததாக இருக்கும்.
அஷ்டமச் சனி: ஒருவரது ராசிக்கு எட்டாவது இடத்தில் கோச்சார சனி வருவது தான் அஷ்டமத்து சனி. அஷ்டம சனியில் தொட்டது துலங்காது, அஷ்டமத்து சனி காலத்தில் பூர்வீகத்தை விட்டு இடம் பெயர நேரும். வீண் பிரச்சினைகள் சிக்கி, பழி ஏற்க நேரும்.புத்தி தடுமாற்றம் மிகுதியாக இருக்கும். புத்தி வேலை செய்யாது. ஆனால், உணர்ச்சி மட்டும் வேலை செய்யும்.
ஏழரை சனி 7 1/2 ஆண்டுகளில் செய்யும் வேலையை அஷ்டமச் சனி இரண்டரை வருடத்தில் செய்து முடித்து விடும். 3 சுற்று ஏழரை, அஷ்டமச் சனியை கடந்தவர்கள் பலர் எந்த பதட்டமும் இல்லாமல் நிதானமாக சனி பகவான் என்றால் யார் ? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். 3 சுற்றிலும் அடி வாங்கி ரண வேதனையில் முற்றும் துறந்த முனியாக ஞான மார்க்கத்திற்கு முக்திக்கு வழி தேடி சென்றவர்களும் இருக்கிறார்கள்.
லக்னம் வலிமை பெற்றவர்களையும் சந்திரனுக்கு குரு பார்வை இருப்பவர்களுக்கும், தர்ம கர்மாதிபதி யோகம் அமைந்தவர்களையும் எந்த சனிப் பெயர்ச்சியும் எதுவும் செய்யாது.
ஜாதகத்தில் சாதகமான தசா புத்தி இல்லாமல் போனாலும் குரு, சனி, சந்திரன் பலவீனமாக இருந்தாலும் தாக்கம் மிகுதியாகவே இருக்கும். இந்த காலகட்டத்தில் சாதகமற்ற தசாபுத்தி இருந்தால் சொந்த தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் ஏற்ற இறக்கம், தடை தாமதம், பண விரயம், பண இழப்பு இருக்கும்.சிலர் தவறான தொழில் முதலீடு செய்து பாதிப்படைகிறார்கள்.
அதிக முதலீடு செய்த முதலீட்டாளர்கள் , தொழிலில் கொடி கட்டி பறந்தவர்கள் கூட மிகச் சாதாரணமாக கண் இமைக்கும் முன் தொழிலில் சரிசெய்ய முடியாத இழப்பை சந்திக்கிறார்கள். இதனால் தொழிலை விட்டு விலகவும் முடியாமல் மேலே தொழிலை தொடரவும் முடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார்கள்.
எல்லா சனி தோஷத்திற்கும் ஒரே தீர்வு, அலைபாயும் மனதை கட்டுப்படுத்துதல், அவரவர் சார்ந்த பிரார்த்தனை மற்றும் குலதெய்வ வழிபாடே, பிரச்சினைகளில் இருந்து விடுபடும் பாதையாம்.
*