சபரிமலையில், இன்று மகரஜோதி தரிசனம் : சிறப்பு ஏற்பாடுகள்..

By 
ayya34

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு திருவிழா நடந்து வருகிறது. மகர விளக்கு திருவிழாவின்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

இதனை காண நாடு முழுவதிலும் இருந்து ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலை வருவார்கள். இந்த ஆண்டுக்கான மகர விளக்கு தரிசன நிகழ்ச்சி இன்று  மாலை நடக்கிறது. அப்போது ஐயப்பன் சபரிமலை பொன்னம்பல மேட்டில் ஜோதியாய் காட்சி அளிப்பார். அப்போது பக்தர்களின் சரண கோஷம் விண்ணை பிளக்கும். 

மகர ஜோதியை தரிசிக்க கடந்த இரண்டு நாட்களாகவே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஜோதியை தரிசிக்க காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கி உள்ளனர். இன்று, ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே அவர்கள் மலை இறங்குவார்கள். இதனால் சன்னிதானத்திலும், காட்டு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. 

சபரிமலையில் ஏராளமான பக்தர்கள் தங்கி உள்ளதால், சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இன்று பகல் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது. 

மேலும் சன்னிதானம், பொன்னம்பலமேடு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே மகர ஜோதி தினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் ஊர்வலமாக சன்னிதானத்திற்கு எடுத்து வரப்படும். இந்த திருவாபரண பெட்டிக்கு பக்தர்கள் பல இடங்களில் வரவேற்பு அளித்தனர். 

மகர ஜோதியாய் ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும்போது, சன்னிதானத்தில் ஐயப்பன் திருவாபரணம் அணிந்து அருள்பாலிப்பார். அதனை காணவும் சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மகர ஜோதி தரிசனம் முடிந்த பின்னரே பக்தர்கள் சபரிமலையை விட்டு வெளியேறுவார்கள்.

Share this story