தான் என்கிற ஈகோ : சிறுகதை 

By 
story

ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்வார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். 

அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது. சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும். அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார். 

தன் திறமை எல்லாம் காட்டி, தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.

 எமன் வந்தார். பார்த்தார், திகைத்துப் போனார். மூன்றும் சிலைகளா? இல்லை இரண்டுதான் என்பதை யூகித்துவிட்டார்.

ஆனால், எவை சிலைகள், எது சிற்பி என்பதைத்தான் அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நேர்த்தி. தவறாக சிலையின் மீது கயிற்றை வீசிவிடக்கூடாதே. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. யோசித்தார். ஒரு யோசனை வந்தது.

சத்தமாக வாய்விட்டுச் சொன்னார், ‘அட என்ன தத்ரூபமாக இருக்கிறது. இவற்றைச் செய்த சிற்பியை என்னால் பாராட்டாமல் இருக்கவே முடியாது. என்னாலேயே எது சிலை எது ஆள் என்று கண்டுபிடிக்க முடியவில்லையே.. இப்படி சொல்லிவிட்டு மூன்று சிலைகளையும் உன்னிப்பாக கவனித்தார். அவர் எதிர்பார்த்தது நடந்தது. 

நடுவில் படுத்திருந்த சிலையின் உதட்டில் லேசான முறுவல் தெரிந்தது. தற்பெருமைதான், வேறென்ன!. சடாரென வீசினார் கயிற்றை.

கெடுத்தது எது? தான் என்கிற ஈகோ. ஆக பலருடைய பிரச்சனைகளுக்கு, மனவருத்தங்கள்,மற்றும் சோர்வுகளுக்கு காரணம், நான் தான்.. தனது நான் தான் பெரியவன் என்கின்ற எண்ணங்களை ஒழித்தோம் என்றால் நாம் மிகப்பெரிய வெற்றியாளர்கள்.
*

Share this story