திருவண்ணாமலை பிரம்மோற்சவ விழா நிறைவு : தரிசன நிகழ்வுகள்..

By 
thiru2

பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. 

இக்கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்த கோவிலில் விடுமுறை நாட்கள், விசேஷ நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். 

மேலும், பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்வதற்காக வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும். 

பிரம்மோற்சவ விழா :

இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஆனி பிரம்மோற்சவமும் ஒன்றாகும். 

இந்த ஆண்டுக்கான ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 8-ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

விழா நாட்களில் காலையும், மாலையும் சந்திரசேகரர் மற்றும் விநாயகர் உற்சவ உலா மாட வீதியில் நடைபெற்றது. 

இந்நிலையில், ஆனி பிரம்மோற்சவ விழா, திருவண்ணாமலை அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. 

தீர்த்தவாரி :

முன்னதாக, கோவிலில் சாமி சன்னதியில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் அம்பாளுடன் சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

பின்னர், கோவிலில் இருந்து புறப்பட்டு, மாட வீதியில் வலம் வந்து அய்யங்குளத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார். 

அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சூல ரூபத்திற்கு அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. 

தொடர்ந்து சிவாச்சாரியார்கள் மங்கள வாத்தியங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க சூலத்திற்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்தனர். 

பின்னர், சாமிக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Share this story