வேதநாராயணசாமி கோவில் வருடாந்திர பவித்ரோற்சவம்; 19, 20 ந்தேதி நடைபெறுகிறது..

By 
veda

திருப்பதி மாவட்டம், நாகலாபுரத்தில் உள்ள வேதவல்லி சமேத வேதநாராயணசாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு உற்சவங்கள், திருவிழாக்கள் நடக்கின்றன. 

அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக ஆண்டுக்கு ஒரு முறை ஆகம சாஸ்திரப்படி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான பவித்ரோற்சவம் வருகிற 19, 20-ந்தேதிகளில் நடக்கிறது. 19-ந்தேதி காலை ஆச்சார்ய ருத்விக் வாரணம், மாலை சேனாதிபதி உற்சவம், இரவு அங்குரார்ப்பணம் நடக்கிறது. 

20-ந்தேதி காலை உற்சவர்களான வேதவல்லி சமேத வேதநாராயணசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், நெய், இளநீர், பன்னீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம், பவித்ர மாலைகள் சமர்ப்பணம் ஆகியவை நடக்கிறது. அதன் பிறகு, இரவு பூர்ணாஹுதி நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பவித்ரோற்சவம் நிறைவடைகிறது. 

மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Share this story