இன்று அட்சய திருதியை : தெரிந்த பண்டிகை, தெரியாத தகவல்கள்..

By 
atsh2

அட்சய என்றால் அள்ள அள்ள குறையாத என்று பொருள். 15 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் வரும் திதிகளில் மூன்றாவது திதியாக வருவது திருதியை. 

திருதியை என்ற சொல் மூன்றாவது என்பதை குறிப்பதாகும். அட்சய திருதியை நாளில் தான் கிருதயுகம் தோன்றியதாக பவிஷ்யோத்தர புராணம் சொல்கிறது. 

சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளை அட்சய திருதியை தினமாகக் கொண்டாடுகின்றோம். சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். 

மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது.

பகீரதன் தவம் செய்து, கங்கையை பூமிக்கு கொண்டு வந்த நாளும் இந்த அட்சய திருதியை நாளில்தான். மகாலட்சுமி தவம் செய்து, திருமாலின் திருமார்பில் நிரந்தரமாக இடம் பிடித்ததும் இந்த அட்சய திருதியை நாளில்தான். 

குபேரன், செல்வத்திற்கு அதிபதியாக மகாலட்சுமியிடம் இருந்து வரம் பெற்றதும், பிட்சாடனராக வந்த சிவ பெருமான் தனது பசி பிணி தீர அன்னபூரணியிடம் தனது யாசக பாத்திரம் நிரம்பப் பெற்றதும் இதே அட்சய திருதியை நாளில்தான். மகாவிஷ்ணுவின் 6வது அவதாரமான பரசுராமர் அவதாரம் செய்ததும் இந்த நாளில் தான்.

நவகிரகங்களில் மங்களகாரகன் என போற்றப்படும் குருவுக்கு பொன்னன் என்ற பெயரும் உண்டு. இதன் காரணமாகவே அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க வேண்டும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் மங்கலங்கள் அதிகரித்து, தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது. இயலாதவர்கள் கல் உப்பு வாங்கலாம்.

அட்சய திருதியை அன்று நாம் செய்யும் தானத்தின் பலன் கோடிப் பசுக்களை தானம் செய்ததற்கு ஒப்பானது என்று பாகவத புராணம் பேசுகிறது. அதனால் அட்சய திருதியை நாளில் நம்மால் இயன்ற அளவு தானம் செய்யலாம். படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கி கொடுக்கலாம். பள்ளி கட்டணம் கட்டலாம். ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம்.

வட மாநிலங்களில் அட்சய திருதியை நாளில் தான் விநாயகரையும், மகாட்சுமியையும் வணங்கி புது கணக்கினை துவங்குவார்கள். மகாலட்சுமியின் அருளை அனைவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை தினத்தின் நோக்கமாகும். 

இப்படி எண்ணற்ற சிறப்புக்களையும், பெருமைகளையும் கொண்ட தினம் அட்சய திருதியை என்பதால் தான் இந்த நாளை தவற விடாமல் பூஜை செய்து வழிபட வேண்டும் என்கிறார்கள். இந்த நாளில் முன்னோர்க்கு தர்ப்பணம் கொடுப்பதும் பல மடங்கு புண்ணிய பலனை தரும்.
 

Share this story