ஆஞ்சநேயருக்கு, வெற்றிலை மாலை சாத்துவது ஏன் தெரியுமா?

By 
Anjaneyars, do you know why the betel leaf garland

இலங்கையில், அசோகவனத்தில் சிறை வைக்கப்பட்ட சீதையைக் கண்டு பிடிக்க அனுமன் புறப்பட்டுச் சென்றார். 

நீண்ட தேடுதலுக்குப் பிறகு, சீதை அசோகவனத்தில் இருப்பதை அவர் கண்டுபிடித்தார். 

ராமர் நலமாக உள்ள விபரங்களைச் சீதையிடம் அனுமன் தெரிவித்தார். பிறகு, ராமர் தந்த மோதிரத்தை சீதா தேவியிடம் வழங்கினார் ஆஞ்சநேயர். சீதாதேவி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

ஆசீர்வாதம் :

பணிவுடன் வணங்கி நிற்கும் ஆஞ்சநேயருக்கு, அட்சதை போட்டு ஆசீர்வதிக்க வேண்டும் என்று சீதாதேவி விரும்பினாள். ஆனால், அப்போது, சீதைக்கு அட்சதை போன்ற பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதனால், அருகில் இருந்த வெற்றிலைக் கொடியில் இருந்து அதன் இலைகளைப் பறித்து, அதை அனுமன் மீது தூவி, மனதார ஆசீர்வதித்தாள். அந்த வெற்றிலைகளை மாலையாகவும் கட்டி அனுமனுக்குப் போட்டு மகிழ்ச்சியடைந்தாள். 

சீதா பிராட்டியார் கையால் கிடைத்த இந்த வெகுமதியை, ஸ்ரீ ஆஞ்சநேயரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். 

அன்று முதல், அனுமனுக்கு வெற்றிலை மாலை போடும் வழக்கம் ஏற்பட்டது. 

பொதுவாக, அனைத்து தெய்வங்களுக்கும் வெற்றிலையை சமர்ப்பிக்கும் வழக்கம் உள்ளது. என்றாலும், அனுமனுக்கு நாம் படைக்கும் வெற்றிலை சிறப்புக்குரியதாக மாறுகிறது. 

தர்ம சாஸ்திரம் :

அனுமனுக்கு வெற்றிலை மாலை சமர்ப்பிக்கும்போது, வெற்றிலையின் எண்ணிக்கை 2, 4, 6, 8 என்பதாக இரட்டைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும். 

வெற்றிலையுடன் வைக்கப்படும் பாக்கின் எண்ணிக்கையும் 1, 3, 5, 7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைய வேண்டும் என்கிறது தர்ம சாஸ்திரம்.

ஆகவே, ஸ்ரீஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாகக் கட்டி போடும்போது, இவ்வாறே இரண்டு வெற்றிலை ஒரு பாக்கு அல்லது நான்கு வெற்றிலை மூன்று பாக்கு என்பதாக இருக்கவேண்டும்.

மேலும், வெற்றிலையை நரம்பில்லாத முன்பகுதி வெளியில் தெரியுமாறு மடித்து, வாழை நார் போன்றவற்றைக் கொண்டு, மாலையாகத் தொடுத்துப் போடலாம்.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால், தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும், நல்ல வேலை கிடைக்கும். பதவி உயர்வும் கிடைக்கப்பெறும்.

Share this story