கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடக்கம் : சில தகவல்கள்.. 

By 
chirt

கிறிஸ்தவர்கள் கடவுளாக வழிபடும் ஏசு கிறிஸ்து மனிதர்களை பாவங்களில் இருந்து மீட்பதற்காக பாடுகள் பட்டு, சிலுவையில் அறையுண்டு மரித்தார். 

இதை நினைவு கூரும் விதமாக, உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து, வறியவர்களுக்கு உதவிகள் செய்வது வழக்கம். இந்த நாட்களை அவர்கள் ஆண்டுதோறும் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். 

தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று ஆகும். இன்றிருந்து, கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்குகிறது. சாம்பல் புதன் தினத்தன்று கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்கள் அனைத்திலும் காலையில் சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம். இந்த சிறப்பு திருப்பலியின்போது கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் பூசப்படும். 

மனிதனே நீ மண்ணாக இருக்கிறாய், மண்ணுக்கே திரும்புவாய் என்பதன் அடையாளமாக இந்த சாம்பல் பூசப்படுகிறது. நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் இன்று காலை 6.30 மணிக்கு சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற இருக்கிறது. 

இதேபோல மாவட்டம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற இருக்கிறது. குமரி மாவட்டம் முழுவதிலும் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயங்களிலும் சாம்பல் புதன் தின சிறப்பு ஆராதனை மற்றும் வழிபாடுகள் இன்று மாலை நடைபெற உள்ளது. 

தவக்காலத்தையொட்டி 24, 25, 26-ந் தேதிகளில் குமரி சி.எஸ்.ஐ. பேராயம் சார்பில் நற்செய்திப் பெருவிழாவும் நடத்தப்பட உள்ளது. சாம்பல் புதன் தினத்தில் இருந்து கிறிஸ்தவர்கள் நோன்பு கடைபிடிப்பார்கள். இந்த நோன்பு ஏசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளிக்கு அடுத்த சனிக்கிழமை வரை கடைபிடிக்கப்படும். 

ஏசு சிலுவையில் அறையப்பட்ட மூன்றாம் நாளில் அதாவது புனித வெள்ளிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் உயிர்த்தெழுவார். அந்த நாள் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகையாகவும், ஏசுவின் உயிர்ப்பு பெருவிழாவாகவும் கொண்டாடப்படும்.

Share this story