முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!
சிவபெருமானுக்கு 64 வகையான வடிவங்கள் இருப்பதைப் போல, முருகப்பெருமானுக்கும் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன.
அவற்றில் சில வடிவங்களைப் பற்றியும், அவற்றை வழிபட்டால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் பார்ப்போம்.
ஞானசக்திதரர் : திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால், நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.
கந்தசாமி : பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும்.
ஆறுமுக தேவசேனாபதி : சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக் கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால், மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.
சுப்பிரமணியர் : நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘சுப்பிரமணியர்’ ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர்.
கஜவாகனர் : திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக் கோபுரத்தில், யானை மீது இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை ‘கஜவாகனர்’ என்கிறார்கள். இவரை வழிபட்டால், துன்பங்கள் விலகி ஓடும்.
சரவணபவர் : சென்னிமலை மற்றும் திருப்போரூர் திருத்தலங்களில் ‘சரவணபவர்’ திருவுருவை காணலாம். இந்த வடிவத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
கார்த்திகேயர் : கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது. இவரை வழிபட்டால், சகல சௌபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில், இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.
குமாரசாமி : கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. இவரை வழிபட்டால், ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலிலும் இந்த திருவுருவை தரிசிக்க முடியும்.
சண்முகர் : திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும். இவரை வழிபட்டால், சிவன்- சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தாரகாரி : தாரகாசுரன் என்னும் அசுரனை அழித்ததால், முருகப்பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோவிலில் தாரகாரி அருள்கிறார்.
சேனானி : தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால், பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும்.
பிரம்மசாஸ்தா : காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால், எல்லா வகை செயல்களிலும் தேர்ச்சி பெறலாம். கல்வியில் வெற்றி கிட்டும்.
வள்ளி கல்யாணசுந்தரர் : திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால், திருமணத்தடைகள் விரைவில் அகலும்.
பாலசுவாமி : திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது. இவர், அங்கக் குறைபாடுகளை அகற்றுபவராக இருக்கிறார். மேலும், நீண்டநாள் நோய் விலகும்.
சிரவுபஞ்சபேதனர் : திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. இவரை வழிபட்டால், துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.
சிகிவாகனர் : மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.