330 சிவாலயங்களிலும் மகா சிவராத்திரி; சிறப்பு ஏற்பாடு..

By 
sivratri

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- 

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களின் சார்பில், ஆடல் வல்லான் சிவபெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி, நமது பாரம்பரிய கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக, சமய நிகழ்ச்சிகளுடன் மகா சிவராத்திரி விழாவினை சிறப்பாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் கொண்டாடப்பட்ட மகாசிவராத்திரி பெருவிழா இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில், திருவண்ணாமலை, அருணாச்சலேசுவரர் கோவில், தஞ்சாவூர், பிரகதீஸ்வரர் கோவில், பேரூர், பட்டீஸ்வரர் கோவில் 

மற்றும் திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவில் ஆகிய 5 கோவில்கள் சார்பில் மகா சிவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள 330 சிவாலயங்களிலும் வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) மாலை முதல் 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை வரை மகா சிவராத்திரி திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் சிறப்பாக கொண்டாடிட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. 

அந்த வகையில், மகா சிவராத்திரி விழாவை கொண்டாடும் அனைத்து கோவில்களிலும் குறிப்பாக கோபுரங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக மின் அலங்காரங்கள், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத் தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகனம் நிறுத்தம், பக்தர்களின் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திட இடஒதுக்கீடு ஆகியவற்றை ஏற்பாடு செய்திட வேண்டுமெனவும், 

இது தொடர்பாக தொடர்புடைய துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி அவர்களின் ஒத்துழைப்புடன் திருவிழா நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு நிர்ணயம் செய்து மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்கள் கண்டு பயன்பெறும் வகையில் உரிய ஏற்பாடுகளை அந்தந்த கோவிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் சிறப்பாக நடத்திட வேண்டும். 

மேற்படி கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும் பொழுது தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மற்றும் இசைப் பள்ளிகளில் பயின்ற கலைஞர்கள் மற்றும் கலை பண்பாட்டுத்துறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். 

மகா சிவராத்திரி அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை செய்திடவும், எவ்விதமான புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் நிகழ்ச்சிகளை நடத்திடவும், கோவில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு. 

இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழாவினை கண்டுகளிக்கும் பக்தர்கள் மனநிறைவடையும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Share this story