மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் தெப்பத்திருவிழா 26-ந்தேதி தொடக்கம்; நிகழ்ச்சிகள் விவரம்..

By 
thayu

தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை மட்டுவார் குழலம்மை உடனுறை தாயுமானசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் உத்திரத்திற்கு முந்தைய நாளில் தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். 

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 27-ந்தேதி முதல் காலை 8 மணிக்கு பல்லக்கு புறப்பாடும், மாலை 7 மணிக்கு (முறையே ஒவ்வொரு நாளும்) சுவாமி கற்பகவிருட்ச வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் வலம் வருகின்றனர். 

28-ந்தேதி சுவாமி பூதவாகனம், அம்பாள் கமல வாகனம். 29-ந்தேதி சுவாமி கைலாசபர்வதம் வாகனம், அம்பாள் அன்னவாகனம். 30-ந்தேதி சுவாமி-அம்பாள் வெள்ளி ரிஷப வாகனம். 31-ந்தேதி சுவாமி யானை வாகனம், அம்பாள் கண்ணாடி பல்லக்கு. 1-ந்தேதி சுவாமி நந்திகேஸ்வரர் வாகனம், அம்பாள் சிம்ம வாகனம். 2-ந்தேதி சுவாமி தங்க குதிரை வாகனம், அம்பாள்கண்ணாடி பல்லக்கு ஆகிய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் புறப்பாடு செய்யப்பட்டு வீதி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இதில், முக்கிய நிகழ்ச்சியான தெப்பத்திருவிழா வருகிற 3-ந்தேதி இரவு நடைபெறும். அன்று காலை 10 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் தெப்பத்திற்கு செல்ல புறப்பாடு செய்யப்படும். 

மாலை 7 மணிக்கு தெப்பக்குளத்தில், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் 5 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். 

தொடர்ந்து 4-ந்தேதி காலை 8 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அதனை தொடர்ந்து தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு சேர்த்தி சேவை புறப்பாடும், இரவு 10 மணிக்கு அவரோகணம் எனப்படும் கொடியிறக்க நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

Share this story