பெண்கள் மட்டுமே வடமிழுக்கும் மீனாட்சி அம்மன் தேரோட்டம் : படியளந்த இறைவன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் அஷ்டமி சப்பர தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது.
இத்தேரோட்டம், சகல ஜீவராசிகளுக்கும் இறைவன் படியளந்த லீலையை எடுத்துக்கூறும் வகையில் நடைபெற்றது. இது குறித்து, புராண நிகழ்வு பார்ப்போம்.
பார்வதியின் சோதனை :
ஒரு சமயம், பார்வதிக்கு இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இறைவன் உணவு அளிக்கிறாரா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்தது. இதனை சோதனை செய்ய, பார்வதி குவளைக்குள் ஒரு எறும்பை அடைத்துவிட்டார்.
சிவபெருமான் அன்று அனைத்து உயிரினங்களுக்கும் படியளந்து விட்டு திரும்பினார்.
அப்போது, இடைமறித்த பார்வதி, தாம் அடைத்து வைத்துள்ள எறும்புக்கு படியளக்க மறந்துவிட்டார் என நினைத்து, சிவன் முன்பு குவளையைத் திறந்தார். அப்போது, அதில் இருந்த எறும்பு அரிசியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
இதையடுத்து, பார்வதி தன் தவறை உணர்ந்தார். உலகில் தோன்றிய எல்லா உயிரினங்களுக்கும் தினமும் ஏதோ ஒரு வழியில், இறைவன் உணவு வழங்கி படியளக்கிறார் என்பதை விளக்கும் வகையில், மதுரையில் பெண்கள் மட்டும் வடமிழுக்கும் அஷ்டமி சப்பரத் தேரோட்டம் நடக்கிறது.
அதன்படி, தேரோட்டத்தின்போது சிவாச்சாரியார்கள் பூஜை செய்யப்பட்ட அரிசியைத் தேர் வரும் வழித்தடத்தில் வீசிச் செல்வார்கள்.
பசி எனும் நோய் :
பின்னர், தேர் சென்ற பிறகு அதனை பக்தர்கள் சேகரித்து வீட்டுக்கு கொண்டு செல்வார்கள். அவ்வகையில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பெண்கள் அரிசியைச் சேகரித்தனர்.
இதனை வீட்டுக்கு கொண்டு சென்று வைத்து வேண்டிக்கொண்டால், பசி எனும் நோய் ஒழிந்து, அள்ள அள்ள அன்னம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.