கருணை பொழியும் திருவிளையாடல் புராணம்..

By 
 Mercy shower myth ..

சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளாகத் திகழும் சிவபெருமான், மதுரை நகரில் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களைப் பற்றிக் கூறும் வரலாற்றை ‘திருவிளையாடல் புராணம்’ என்கிறோம். 

உலக உயிர்களிடம் அன்பு கொண்டு, அவர்களுக்கு அருள் செய்த இறைவனின் கருணையை, கதை களாக இந்த புராணம் விளக்குகிறது.

பரஞ்சோதியும் அகத்தியரும் :

இந்த நூலை இயற்றியவர் பரஞ்சோதி முனிவர். இருப்பினும், இந்த புராணம் முதன் முதலாக தமிழ்க்கடவுளான முருகப்பெருமானால், அகத்தியருக்கு அருளப்பட்டது. அகத்தியர் மூலம், மற்ற முனிவர்கள் அறிந்துகொண்டனர்.

பரஞ்சோதி முனிவர் சிவதல யாத்திரை மேற்கொண்ட வேளையில், மதுரைக்கு வந்து தங்கினார். அப்போது, அவரது கனவில் தோன்றிய மீனாட்சி அம்மன், திருவிளையாடல் புராணத்தைப் பாட கட்டளையிட்டார். அதன்படி, அவர் இயற்றியதே ‘திருவிளையாடல் புராணம்.’

திருவிளையாடல் புராணத்தை ‘திருஆலவாய் மான்மியம்’, ‘மதுரைப் புராணம்’ என்றும் அழைக்கிறார்கள்.

தமிழ் மொழியில் உள்ள மூன்று புராணங்கள், சிவபெருமானின் மூன்று கண்களோடு ஒப்பிடப்படுகின்றன. 

அதில், சேக்கிழார் இயற்றிய ‘பெரியபுராணம்’ வலது கண்ணாகவும், கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய ‘கந்தபுராணம்’ நெற்றிக்கண்ணாகவும், ‘திருவிளையாடல் புராணம்’ இடது கண்ணாகவும் விளங்குகின்றன.

இந்தப் புராணம், மொத்தம் 3 ஆயிரத்து 363 பாடல்களால் ஆனது. இறைவனின் திருவிளையாடல் 344-வது செய்யுளில் இருந்துதான் தொடங்குகிறது. அதற்கு முந்தைய 343 செய்யுள்களும், செய்யுள் காப்பு மற்றும் மதுரை நகர சிறப்புகளை எடுத்துரைக்கின்றன.

படலங்கள் வகை :

திருவிளையாடல் புராணமானது, ‘மதுரைக் காண்டம்’, ‘கூடற்காண்டம்’, ‘திருஆலவாய் காண்டம்’ என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

மதுரைக் காண்டத்தில் 18 படலங்களும், கூடற்காண்டத்தில் 30 படலங்களும், திருஆலவாய் காண்டத்தில் 16 படலங்களும் உள்ளன.

இதில், இந்திரன் பழி தீர்த்த படலம் முதல், வருணன் விட்ட கடலை வற்றச் செய்த படலம் வரை மதுரைக்காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

நான்மாடக் கூடலான படலம் முதல், நாரைக்கு முக்தி அளித்த படலம் வரை கூடற்காண்டத்தில் உள்ளன.

திருஆலவாயான படலம் முதல் வன்னியும், கிணறும், லிங்கமும் அழைத்த படலம் வரை திருஆலவாய்க் காண்டத்தில் இடம் பெற்றுள்ளன.

Share this story