மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் : முதல் முறையாக, நாளை சீனிவாசப் பெருமாள் தெப்ப உற்சவம்..

By 
desikar

சென்னை மைலாப்பூரில் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானம் உள்ளது. சுமார் 350 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் ஸ்ரீவேதாந்த தேசிகருடன் ஸ்ரீஹயக்ரீவரும் அருள்பாலித்து வந்தார். 

இந்நிலையில், இந்த கோவிலில் அனைத்து பக்தர்களும் வந்து வழிபடும் வகையில், சீனிவாச பெருமாளுக்கும் சன்னதி கட்ட திட்டமிடப்பட்டது. திருப்பதி சீனிவாசபெருமாளை போலவே, மயிலாப்பூரில் சீனிவாசப் பெருமாளும், உடன் அலர்மேல் மங்கை தாயாரும் 1924-ம் ஆண்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. 

இதில் சீனிவாசப் பெருமாள் சன்னதி, கடந்த 1924-ம் ஆண்டு ஜூன் 10-ந் தேதி கட்டி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி உடன்சீனிவாசப் பெருமாள் பக்தர்களுக்கு 100 ஆண்டுகளாக அருள்பாலித்து வருகிறார். ராமர், லட்சுமி நரசிம்மர், ராமானுஜர், சக்கரத்தாழ் வார், ஆண்டாள், ஆழ்வார் ஆச்சாரியர்கள், கருடன், அனுமன் சன்னதிகளும் இந்த கோவிலில் உள்ளன. 

இந்த கோவிலின் உற்சவ விழாக்களில் பலர் உபயதாரர்களாக இருந்து வருகின்றனர். ஸ்ரீனிவாசப் பெருமாள் சன்னதி கட்டப்பட்டு 100 ஆண்டுகளாக இது வரை தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், முதல் முறையாக ஏப்-1ந்தேதி மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நடத்தப்படுகிறது. 

இதையொட்டி, இன்று  31-ந் தேதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு பிறகு சீனிவாசப் பெருமாள் மடிப்பாக்கத்துக்கு உலா செல்கிறார். மயிலாப்பூரில் இருந்து மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு ஸ்ரீபாதம் பணியாளர்கள் சுவாமியை தோளில் சுமந்து ஊர்வலமாக செல்கின்றனர். 

வேதபாராயண சபா உறுப்பினர்கள் வனபோஜன தர்மகர்த்தாக்கள் முன்னிலையில் மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் ராமர் கோவிலில் ஏப். 1-ந் தேதி சனிக்கிழமை காலை சீனிவாசப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறு கிறது. அன்று மாலை மடிப்பாக்கம் கார்த்திகேயபுரத்தில் உள்ள ஏரியில் தெப்ப உற்சவம் நடைபெறும். 

தெப்பத்தில்சீனிவாசப் பெருமாள் எழுந்தருளி பவனி வருவார். தெப்ப உற்சவத்தை தொடர்ந்து, அன்று இரவு 10.30 மணி அளவில் மடிப்பாக்கத்தில் இருந்து சீனிவாசப் பெருமாள் ஊர்வலம் புறப்பட்டு மறுநாள் ஏப்.2-ந் தேதி ஞாயிறு அதிகாலை மயிலாப்பூர் கோவிலை வந்தடைவார். 

இதன்பிறகு, மயிலாப்பூரில் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில், சீனிவாசப் பெருமாள் சன்னதி கட்டப்பட்டதன் 100-வது ஆண்டு தொடக்க விழா ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. தொடக்க விழாவை அஹோபில மடம் அழகியசிங்கர் ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். 

நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, வரும் 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை மாதம்தோறும் கோவிலில் உற்சவ நிகழ்ச்சிகள், இசை, நாட்டியம், சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

Share this story