பத்ரகாளி அம்மன் கோவில் தூக்கத்திருவிழா : கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்

By 
kol6

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குழந்தை பாக்கியம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழவும் தூக்கத்திருவிழா நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டு தூக்க திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து வெங்கஞ்சி கோவிலுக்கு கொடிமரம் கொண்டுவரப்படுகிறது. மாலை 3 மணிக்கு மூலக்கோவிலில் இருந்து அம்மன் திருவிழா நடைபெறும் வெங்கஞ்சி கோவிலுக்கு மேளதாளங்களுடன் எழுந்தருள்வார். 

தொடர்ந்து இரவு 7 மணிக்கு கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் தூக்க திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சிக்கு கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கான் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். 

நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஹரிஹர சம்மந்த தேசிக பரமாச்சாரிய திருவடிகள் ஆன்மிக உரையாற்றுகிறார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த், நெல்லை தொகுதி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கிள்ளியூர் எம்.எல். ஏ. ராஜேஷ்குமார், கொல்லங்கோடு நகராட்சி தலைவர் ராணி ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். 

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், உஷ பூஜை, கணபதி ஹோமம், தீபாராதனை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. 19-ந் தேதி காலையில் தூக்கநேர்ச்சை குலுக்கல் மற்றும் காப்புக்கட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு 9 மணிக்கு தூக்கக்காரர்களின் நமஸ்காரம் நடைபெறும். 

21-ந் தேதி இரவு 7 மணிக்கு நடக்கும் பண்பாட்டு மாநாட்டை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார். 21-ந் தேதி நடக்கிறது 23-ந் தேதி காலை 7.30 மணி முதல் தூக்கக்காரர்களின் உருள் நமஸ்காரம் நடக்கிறது. 

24-ந் தேதி மாலையில் வண்டியோட்டம் எனப்படும் தூக்கத்தேர் முன்னோட்டம் நடக்கிறது. 25-ந்தேதி சனிக்கிழமை அதிகாலையில் தூக்கக்காரர்களின் முட்டுகுத்தி நமஸ்காரம், அம்மன் பச்சை பந்தலில் எழுந்தருளுதல் நடக்கிறது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவேற்றும் நிகழ்ச்சி தொடங்குகிறது.
 

Share this story