வளமும் நலமும் பெருக்கும், விநாயகரின் அறுபடை வீடு.!
முருகப்பெருமானுக்கு அறுபடை வீடுகள் இருப்பதுபோல, விநாயகருக்கும் அறுபடை வீடுகள் இருக்கின்றன.
முருகன் அறுபடை வீடுகள் அவரது அவதாரத்தின் நிகழ்வுகளையும், அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களையும் சொல்வதுபோல அமைந்துள்ளது.
ஆனால், விநாயக பெருமானின் அறுபடை வீடுகள் அதில் இருந்து மாறுபட்டு, நமது வாழ்வுக்குத் தேவையான அனைத்து அம்சங்களையும் தரும் வகையில் அமைந்துள்ளன.
விநாயகர் வீற்றிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான தலங்களில் ஆறே ஆறு தலங்கள் மிகவும் தனித்துவம் கொண்டது அந்த அறுபடை வீடுகளையும், வழிபடுவதால் பெறும் பலன்களையும் காண்போம்.
* திருவண்ணாமலை, விருத்தாசலம், திருக்கடையூர், மதுரை, பிள்ளையார்பட்டி, திருநாரையூர் ஆகிய 6 தலங்கள்தான் விநாயகரின் அறுபடை வீடுகளாக உள்ளன.
* திருவண்ணாமலை தலத்தில் ராஜகோபுரத்தில் உள்ள செல்வகணபதி, விநாயகரின் முதல் படை வீடாக கருதப்படுகிறது. இவரை வழிபட்டால், அல்லல்கள் அனைத்தும் கரைந்தோடி விடும் என்பது ஐதீகமாகும்.
* விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஆழத்து பிள்ளையார் 2-வது படை வீடாக உள்ளார்.
காசிக்கு சமமான இந்த தலத்தில் விநாயகரை வழிபட்டால், நம் வாழ்வுக்குத் தேவையான அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.
* திருக்கடையூர் அன்னை அபிராமி ஆலயத்தில், அமிர்தகடேஸ்வரர் சன்னதி அருகே கள்ளவாரண பிள்ளையார் சன்னதி உள்ளது.
இவர்தான் 3-வது படை வீடாக கருதப்படுகிறார். இவரை வழிபட்டால், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
* மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் அம்மன் சன்னதிக்குச் செல்லும் வழியில், சித்தி விநாயகர் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
இவர், அறுபடை வீடுகளில் 4-வதாக இருக்கிறார். இவரை வழிபட்டால், நாம் வாழ்வில் நினைத்தது எல்லாம் நடக்கும் என்பது ஐதீகமாகும்.
* புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி தலம் 5-வது படை வீடாக திகழ்கிறது. அங்குள்ள தீட்சா கணபதி படை வீடுகளில் ஒருவராக உள்ளார். அவரை வழிபட ஞானம் கிடைக்கும்.
முக்கிய விஷயங்களில் எப்படி முடிவு எடுப்பது என்ற திணறல் ஏற்பட்டால், இவரை வழிபட்டாலோ அல்லது நினைத்து கொண்டாலோ நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும்.
* இறுதியாக, விநாயகரின் அறுபடை வீடுகளில் 6-வதாக திருநாரையூர் தலத்தில் உள்ள பொல்லா பிள்ளையார் உள்ளார்.
தேவார திருப்பதிகங்களை இந்த உலகுக்கு திருப்பி தந்தவர் என்ற மகிமை இவருக்கு உண்டு. இவரை வழிபட்டால் முக்தி தேடி வரும்.
* ஆக விநாயகரின் அறுபடை வீடுகளை தரிசனம் செய்வதன் மூலம், அனைத்து நலன்களையும் நாம் பெற முடியும்.
*