கங்கை நதி குறித்து அரிய தகவல்கள்..

By 
ganga

கங்கை நதி பாயும் அதே மலையிலிருந்து பிறந்து பாயும் வேறு ஆற்று நீருக்கு கங்கையின் தனிச் சிறப்பு இல்லை! அதே மலை. அதே மேகங்கள். அதே மழை. அதே பனி உருகல். என்றாலும் கங்கையின் நீர் வேறாக இருக்கிறது. ஏன் என்பதைக் கண்டுபிடித்து நிரூபிக்க முடியவில்லை.

சில விஷயங்கள் நிரூபிக்க முடியாதவைதாம். கங்கையில் ஓர் ரசவாதம் ஏற்படுகிறது. நான் சொல்லி வருவதில் பல விஷயங்களை நிரூபிப்பது கடினம். கங்கை சாதாரண நதி அன்று. அந்த நதி முழுவதுமே ஓர் ரசாயனச் சாலை. அதனால்தான் கங்கைக் கரையில் அத்தனை புண்ணியத் தலங்கள். கங்கை நதி நீர் முற்றிலும் வேறுபட்டது என்பதை ரசவாதிகளும் விஞ்ஞானிகளும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். 

மற்ற நதி நீரைச் சேமித்து வைத்தால் கெட்டுவிடும்; கங்கை நீர் கெடாது! பல ஆண்டுகள் வைத்திருந்தாலும் கெடாது. ஆனால், மற்ற ஆற்று நீர் சில வாரங்களிலேயே நாறிவிடும். 

ஆற்றில் பிணங்களை வீசினால், ஆறு கெடும். அதன் நீர் நாறும். ஆனால் ஆயிரக்கணக்கான பிணங்களையும் உள்வாங்கிக் கொண்டு நாறாமல் இருக்கிறது கங்கை! 

இன்னொரு வியப்பான அம்சம். சாதாரணமாக எலும்பு, தண்ணீரில் கரையாது. ஆனால் கங்கை நீரில் கரைந்து விடுகிறது. மிச்சம் மீதியே இருப்பதில்லை! தனக்குள் போடப்படும் எல்லாவற்றையும் கரைத்து, அதன் ஆதிமூல, மூலக நிலைக்குக் கொண்டுவந்து விடுகிறது. 

சவங்கள் எந்த முறையிலும் பூரணமாக அழிய பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால், கங்கையில் விரைவில் கரைந்து விடுகின்றன. அப்படியொரு ரசவாதம். கங்கை இதற்காகவே படைக்கப்பட்டது போலத் தோன்றுகிறது. மற்ற ஆறுகள் பாய்வது போல், கங்கை மலையிலிருந்து பாய்வதில்லை. அது பாயும்படியாகச் செய்யப்பட்டுள்ளது. 

இதைப் புரிந்து கொள்வது எளிதல்ல. கங்கையின் பிறப்பிடம் 'கங்கோத்ரி' என்ற மிகச் சிறிய சுனை. ஆனால், உண்மையான பிறப்பிடம் அதுவன்று! அது மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது! இப்போதுள்ள இடம் வெறும் வெளிமுகப்பு மட்டுமே. மக்கள் இதைத்தான் சென்று கண்டு வழிபட்டுத் திரும்புகிறார்கள். 

உண்மையான கங்கைப் பிறப்பிடம் பல்லாயிரம் ஆண்டுகளாக மறைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது! சாதாரண முறையில் அந்த இடத்தை அடைவது சாத்தியமில்லை. சூட்சும சரீரம் கொண்டே அங்கே செல்ல முடியும். நமது பருவுடல் கொண்டு பயணம் செய்ய முடியாது. 

கங்கையில் நீராடியவுடனே உடலில் உள்ள நீர் மாற்றம் அடைகிறது. ஆனால், அந்த மாற்றம் சற்று நேரம்தான் நீடிக்கும். சரியான முறைப்படி சோதனை செய்தால் ஆன்ம பயணம் ஆரம்பமாகிவிடும். கங்கையில் நீராடிய பின், கோயிலுக்குச் சென்று, வந்தனை வழிபாடுகள் செய்வதெல்லாம், அகத்தின் ஆன்மப் பயணத்திற்குப் புறத்தில் உள்ளவற்றைப் பயன்படுத்திக் கொள்வதுதான் - ஓஷோ.

Share this story