சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு இன்றுமுதல் அனுமதி
மலையாள காலண்டரின்படி, துலா மாத பிறப்பை முன்னிட்டு, துலா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
அப்போது, ஆகம விதிகளின்படி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டது.
இன்று (17-ந்தேதி) முதல் வழக்கமாக பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகிறது.
இதனால், இன்று அதிகாலை 5 மணியில் இருந்து சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கோவில் நடை, வருகிற 21-ந்தேதி வரை திறந்திருக்கும். அன்றைய தினம் வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
தற்போது நடைமுறையில் உள்ள தரிசனத்துக்கு ஆன்லைன் முன்பதிவு, கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்காக சான்றிதழ் ஆகியவற்றை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்கள், ஆர்.டி.பி. சி.ஆர். “நெகட்டிவ்’’ சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இல்லாதவர்கள், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், துலா மாத பூஜைகள் முடிந்தபிறகு வருகிற 21-ந்தேதி கோவில் நடை அடைக்கப்படுகிறது.
அதன் பிறகு, நவம்பர் 2-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டு மறுநாளே மூடப்படுகிறது.