கெடுபலன் குறைக்கும், சப்தகுரு வழிபாடு.!

குருபெயர்ச்சியினால், சிலருக்கு நல்ல பலனும் சிலருக்கு கெடுபலனும் ஏற்படுவது காலச்சுழற்சியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், குரு பகவானின் பார்வை தான், கோடி நன்மை தருகிறது. அவரது பார்வை விலகினால் கெடுபலன் நேர்கிறது.
இந்த கெடுபலனை குறைத்து, குருவருளை பெற்று, உயர்திருவாக வாழ்வது எப்படி?
ஸ்ரீகாண்டேயா :
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற ஸ்லோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது.
அதாவது தேவகுரு - பிரகஸ்பதி, அசுரகுரு - சுக்ராச்சாரியார், ஞானகுரு - சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு - பிரம்மா, விஷ்ணு குரு - வரதராஜர், சக்தி குரு - சவுந்தர்ய நாயகி, சிவகுரு - தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர்.
இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம்.
தனி சன்னிதி :
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது.
நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.