திருச்செந்தூர் : புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி
தமிழகத்தில், கொரோனா 3-வது அலையைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கை தொடர்ந்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆகம விதி :
அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் கோவிலில், கடந்த 3 நாட்களாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ஆனால், ஆகம விதிப்படி வழக்கம்போல் அனைத்து பூஜைகளும் நடைபெற்றன.
புனித நீராடல் :
இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்குப் பின்னர் நேற்று திங்கட்கிழமை பக்தர்கள் தரிசனத்துக்கு, வழிகாட்டு நெறிமுறைகளுடன் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அவர்கள் கடலில் புனித நீராடி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர். கோவில் வளாகம் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது.
திருச்செந்தூர் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, பல்வேறு பூஜைகள் நடந்து வருகின்றன.