தியாகத்தால் கட்டப்பட்டுள்ள கோவில் இது.. அயோத்தி ராமர் கோவிலில் சத்குரு தரிசனம்..

By 
sad3

அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு நேரில் சென்ற சத்குரு அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள குழந்தை ராமரை தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள சத்குரு, 

“ராமர் கோவிலை கட்டுவதற்காக பல தலைமுறைகளாக பாடுபட்ட மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இது வெறும் கல்லால் கட்டப்பட்ட கோவில் அல்ல; பக்தியாலும், விழிப்புணர்வான தியாகத்தாலும் கட்டப்பட்டுள்ள கோவில்” என பதிவிட்டுள்ளார். 

மேலும் வீடியோ பதிவில், “500 ஆண்டு தொடர் போராட்டத்திற்கு பிறகு பக்தர்கள் ராமருக்கு கோவில் எழுப்பியுள்ளனர். ராமர் கடந்த காலத்தின் மிகப்பெரும் உத்வேகமாக மட்டுமின்றி எதிர்காலத்திற்கும் பொருத்தமானவராக விளங்குகிறார். உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளும், ஆசைகளும், பாசங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை தான். 

அதேசமயம், அனைவருக்கும் பயன் தர கூட பொது நலன் என்று வரும் போது, உங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு பயன் தர கூடிய செயல்களை நீங்கள் செய்ய வேண்டும்.

இதற்கு ராமர் ஒரு மிகச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர். எல்லாவற்றையும் விட வாழ்க்கை உங்கள் மீது எதை தூக்கி எறிந்தாலும், அதனால் பாதிப்படையாமல் நீங்கள் சமநிலையோடும், மனதின் அடிமைத்தனத்தில் சிக்கி கொள்ளாமல் சுதந்திரமாக வாழ முடியும் என்பதற்கு ராமர் முன் மாதிரியாக திகழ்கிறார்” என்று கூறியுள்ளார்.

சத்குரு தனது பயணத்தின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்தார். இது தொடர்பாக சத்குரு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 

“ஸ்ரீ யோகி ஆதித்யநாத் அவர்களின் தொலைநோக்குப் பார்வையும், தலைமைத்துவமும் உத்தரப் பிரதேசத்தை வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்தின் உருவகமாக மாற்றுவதற்கு வழிவகுக்கின்றன. மக்களின் நல்வாழ்வுக்கான அவரது சுறுசுறுப்பும், அர்ப்பணிப்பும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது” என்று பதிவிட்டுள்ளார்.

Share this story