திருச்செந்தூர் கோவில் மாசி திருவிழா : இன்று தேரோட்டம் மற்றும் நிகழ்ச்சிகள்.. 
 

By 
maasi3

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மாசி திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்று வருகிறது. 8-ம் திருவிழாவான நேற்று பகல் 1.45 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் பச்சை சாத்தி சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவிலில் சேர்தல் நடைபெற்றது.

9-ம் திருவிழாவான நேற்று இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடந்தது. 10-ம் திருவிழாவான இன்று (திங்கட்கிழமை) விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. 

காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் மீன லக்னத்தில் தேரோட்டம் நடக்கிறது. மாசி திருவிழா தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்த வண்ணம் உள்ளனர். 

11-ம் திருவிழாவான நாளை (செவ்வாய் கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. தொடர்ந்து மற்ற கால பூஜை நடக்கிறது அன்று மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் யாதவர் மண்டகப்படி வந்து அங்கு அபிசேகம், அலங்கார தீபாராதனைக்கு பின் இரவு 7 மணிக்கு மேல் திருநெல்வேலி நகரத்தார் மண்டகப்படி சேர்த்தல் நடக்கிறது. அங்கு 10.30 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 

விழாவில் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம், பட்டிமன்றம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

Share this story