நிரந்தரமான திருப்தி எப்போது கிடைக்கும்? : ஆதிசங்கரர் அருளுரை
நம்மை ஆட்டிப்படைப்பது, நம் மனமே. உருவமற்ற இந்த மனம் பெரிய உருவம் படைத்த நம்மை, எப்படியெல்லாம் ஆட்டிப் படைக்கிறது?
மனதுடன் நடத்தும் போராட்டம் என்றும் ஓய்வதில்லை. விழிப்பு நிலையில் மட்டுமல்ல, உறக்க நிலையிலும் கூட மனதின் போராட்டம் நம்மை விட்டு, ஒருபோதும் நீங்குவதில்லை.
இவை தொடர்பாக, ஆதிசங்கரர் அருளியது என்ன? பார்ப்போம்.
* அனைத்து சாஸ்திரங்களும், வேதநூல்களும், மனதை அடக்கும் வழிமுறைகளையே நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
மனதை அடக்கும் யுக்தியை ஆண்டவனிடம் கேட்டுப் பெறவேண்டும்.
* உடலுக்கு கிடைக்கும் இன்பத்தை எவ்வளவு தான் அனுபவித்தாலும், ஒருவனுக்கு நிரந்தரமான திருப்தி கிடைக்கப் போவதில்லை.
இருந்தாலும், மனம் அந்த ஆசையை விட்டு விட இடம் தருவதில்லை.
* காய்ந்த எலும்புத் துண்டைக் கடித்த நாய், தன் வாயிலிருந்து வழிந்த ரத்தத்தை எலும்பிலிருந்து வருவதாக எண்ணி, மேலும் அழுத்தமாகக் கடித்து துன்பத்தை அடையும்.
அதுபோல், மனிதனும் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டு துன்பத்தை அனுபவிக்கிறான்.
* பாலைவனத்தில் தூரத்தில் தெரியும் கானல்நீர் அருகில் சென்றதும் மறைவது போல, மனதில் வாழ்வில் உண்டாகும் இன்பங்களும் நம்மை ஏமாற்றக்கூடியவையே. அவை நிரந்தரமானதல்ல.!