சபரியில் 26-ந்தேதி மண்டல பூஜை விழா : பக்தர்கள் வருகை அதிகரிப்பு
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.
கொரோனா பிரச்சினை காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.
புனித நீராடலுக்கு அனுமதி :
இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தினமும் கோவிலுக்கு 45 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் பக்தர்கள் சன்னிதானத்தில் தங்கவும், பெருவழிப்பாதை வழியாக சன்னிதானம் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை வரும் பக்தர்கள் அங்குள்ள பம்பை ஆற்றில் புனித நீராடுவது வழக்கம்.
இம்முறை பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு அரசு அனுமதி வழங்கி இருந்தது. இந்நிலையில், கேரளாவில் பெய்த பெருமழை காரணமாக பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், பக்தர்கள் பம்பையில் புனித நீராட அனுமதி நிறுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் மழை குறைந்தது. இதனால் பம்பை ஆற்றில் வெள்ளம் குறைந்தது.
இதையடுத்து, சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் பம்பை ஆற்றில் அனைத்து பகுதிகளிலும் புனித நீராட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் அதிகரிப்பு :
இதுபோல, பம்பை ஆற்றில் பக்தர்கள் பலி தர்ப்பணம் கொடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
26-ந் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால், வெளிமாநில பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது.