500 கோடியே ஒரு ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் : அண்ணாமலை சவால்

By 
challe

தி.மு.க.வில் அதிக அளவு சொத்துக்கள் வாங்கி குவித்த அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி வந்த தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கடந்த 14-ந்தேதி 12 பேரின் சொத்து மதிப்பு விவரங்களை வெளியிட்டார். அதில் தி.மு.க.வுக்கு மொத்தம் ரூ.1,408.94 கோடி சொத்து இருப்பதாகவும் கூறி இருந்தார்.

அது மட்டுமின்றி தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளிகளின் மதிப்பு ரூ.3,474.18 கோடி என்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் கூறி இருந்தார். அண்ணாமலை இந்த சொத்து பட்டியலை வெளியிட்ட அன்றைய தினமே தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பத்திரிகையாளர்களை சந்தித்து மறுப்பு தெரிவித்தார்.

குற்றச்சாட்டுக்கான ஆதாரத்தை 15 நாளில் எங்களிடம் வழங்காவிட்டால் அண்ணாமலை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் அண்ணாமலை இதற்கு பதில் அளிக்கையில், தான் சொன்னதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்றும், இன்னும் பகுதி-2, பகுதி-3, பகுதி-4 என தி.மு.க.வினரின் சொத்து பட்டியலை வெளியிட உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. அண்ணாமலைக்கு நேற்று அனுப்பிய வக்கீல் நோட்டீசில் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்ததற்காக 48 மணி நேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். வீடியோ பதிவை நீக்க வேண்டும். இல்லையென்றால் ரூ.500 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும்.

இதை செய்ய தவறினால் வழக்கு தொடரப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார். தி.மு.க. நோட்டீசுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தமிழக பாரதிய ஜனதா கட்சி வெளியிட்ட காணொலி மற்றும் அதைத் தொடர்ந்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பை முழுவதுமாக பார்த்ததற்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அந்த காணொலியின் இணைப்பையும், இணைய தள முகவரியையும் தாங்கள் அனுப்பிய சட்ட அறிக்கையில் வெளியிட்டதற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தி.மு.க.வினர் செய்த சொத்துக் குவிப்பை, தமிழக மக்கள் அறிந்து கொள்ள, ஏப்ரல் 14-ந் தேதி நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு உதவியதில் எனக்கும் மகிழ்ச்சியே. தாங்கள் வெளியிட்டுள்ள சட்ட அறிக்கையில், தி.மு.க.வினருக்கு சொந்தமான 3,478.18 கோடி ரூபாய் மதிப்பிலான பள்ளிகளும், 34,184.71 கோடி ரூபாய் மதிப்பிலான கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் மதிப்பு பொய்யானது என்று தெரிவித்துவிட்டு,

அடுத்த வரியில், ஒருவர் தி.மு.க. உறுப்பினர் அல்லது நிர்வாகியாக இருந்தாலும் அவருக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் நிறுவனங்கள் கட்சியின் சொத்தாக மாறாது என்று குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு புறம் இது தி.மு.க. சொத்து இல்லை என்றும், மறுபுறம் வழங்கப்பட்ட தி.மு.க.வினரின் சொத்து விவரம் பொய் என்று கூறுவதற்கு மட்டும் தி.மு.க. அமைப்புச் செயலாளருக்கு உரிமை இருக்கிறதா?

தி.மு.க. பள்ளி மற்றும் கல்லூரி என்ற தலைப்பின் கீழ், ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினருக்கு சொந்தமான பள்ளி மற்றும் கல்லூரி, பல்கலைக்கழகங்களின் விவரங்கள் வழங்கப்பட்டது. கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில், சென்னை மெட்ரோ ரெயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது.

அவற்றை சி.பி.ஐ.யிடம் அளிக்க உள்ளோம். உங்கள் கட்சியின் தலைவருக்கும், இந்த ஊழலில் தொடர்புடைய அனைவருக்கும் விளக்கம் கேட்டு சம்மன் வரும் வரை தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பொறுமையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அது மட்டுமல்லாது, முன்னுக்குப்பின் முரணான சில கருத்துக்களை, ஆர்.எஸ்.பாரதி தனது தமிழ் சுருக்கத்திலும் ஆங்கில சட்ட அறிக்கையிலும் தெரிவித்துள்ளார்.

ஒன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்திடம் எந்த ஒப்பந்தமும் கையெழுத்து இடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். மற்றொன்றில் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்திற்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார். நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ் என்ற நிறுவனங்களில் பஷீர் முகமது என்பவர் இயக்குனராக இருந்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் எதற்காக பதில் அளிக்கிறார். தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஒரு கூடுதல் தகவலையும் தெரிவிக்க விரும்புகிறோம். இதே நோபல் குழுமத்தின் ஒரு நிறுவனமான நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பஷீர் முகம்மதுடன் தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம். அப்துல்லா இயக்குனராக இருந்துள்ளார். நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்ட செய்தியை, நேற்று எனது டுவிட்டர் பக்கத்திலே கேள்வியாக எழுப்பி உள்ளேன்.

நோபல் பெரஸ் அண்ட் பவர் லிமிடெட், நோபல் புரோமோட்டர்ஸ், நோபல் பிரிக்ஸ், நோபல் ஸ்டீல்ஸ், இவை ஒரு குழுமத்தின் வெவ்வேறு நிறுவனங்கள் என்பதும், தி.மு.க.வினர் தொடர்புள்ள குழுமமான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் முதலீடு செய்வதாக அறிவித்திருக்கும் நிதி, யாருடையது என்றும் தமிழக மக்களின் சார்பாக நான் மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்புகிறேன்.

இந்த முறையாவது பதில் அளிப்பீர்களா? நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களை சந்தித்த தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய் குற்றச்சாட்டை என் மீது சுமத்தி உள்ளார். என் மீதும், பாரதிய ஜனதா கட்சியின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு ரூ.500 கோடியே ஒரு ரூபாய் இழப்பீடாக கோருகிறேன்.

இதை நான் பிரதமர் நிவாரண நிதிக்கு செலுத்த விரும்புகிறேன். 4,400 கோடி ரூபாய் மோசடி செய்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் உரிமையாளர்களை, 2021-ம் ஆண்டு மே மாதம் 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடை பெற்றுக் கொண்ட புகைப்படம் ஒன்றை, சமூக வலைத்தளத்தில் நான் பார்த்தேன்.

100 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இந்த நிதி மோசடியில் மு.க.ஸ்டாலின் நேரடியாக சம்மந்தப்பட்டுள்ளார் என்று நான் குற்றச்சாட்டு வைக்கலாமா என்றும் ஆர்.எஸ்.பாரதியிடம் கேள்வி எழுப்புகிறேன்? அடுத்த 48 மணி நேரத்தில், என் மீதும் எனது கட்சியின் மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால், ஆர்.எஸ்.பாரதி மீது தகுந்த வழக்கு தொடுக்கப்படும்.

மேலும், நீங்கள் அனுப்பிய சட்ட அறிக்கைக்கு பதிலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்தமைக்கு இழப்பீடு கோரும் சட்ட அறிக்கையும் உங்களை விரைவில் வந்து சேரும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.
 

Share this story