நளினி உள்பட 6 பேர் விடுதலை : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
 

By 
nalini

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 1998ம் ஆண்டு 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இதில் படிப்படியாக 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரும் தூக்கு தண்டனை கைதிகளாக இருந்தனர். அவர்களின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தது. 32 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த பேரறிவாளன் கடந்த மே 18ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

இதையடுத்து நளினி உள்பட மற்றவர்களும் தங்களை விடுதலை செய்ய கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான சுப்ரீம் கோர்ட்டு அமர்வு முன்பு விசாரணை நடந்து வந்தது.

பேரறிவாளன் போலவே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை முடிவு மீது முடிவு எடுக்க கவர்னர் காலம் தாழ்த்தியதை கணக்கில் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 6 பேரையும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்தினம் ஆகியோர் இன்று அதிரடியாக உத்தரவிட்டனர்.

மேலும், பேரறிவாளனைப் போலவே மீதமுள்ள 6 பேரும் தங்களுக்கான நிவாரணங்களை கேட்க தகுதி உடையவர்கள் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 

Share this story