இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது, வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல : முதல்வர் ஸ்டாலின்

By 
stalin1111

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :

கேள்வி : கேரள மக்கள் தமிழ்சினிமா, மற்றும் இசையின் பெரும் ரசிகர்கள். 

அதேபோல, ரசிகர் கூட்டம் தமிழக முதலமைச்சருக்கும் அங்கு இருக்கிறது. கண்ணூரில் நடந்த சி.பி.எம். கட்சி மாநாட்டில் உங்களுக்குக் கிடைத்த வரவேற்பில் இருந்து அது தெளிவாகத் தெரிகிறது. 

கேரள முதல்வர் பினராயி விஜயனை தமிழகம் எப்படிப் பார்க்கிறது? 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதில்:-எனக்கு கேரளாவில் ரசிகர்கள் இருப்பது போல 'காம்ரேட்' பினராயி விஜயனுக்கும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. 

அவர் முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டு இருந்த நேரத்தில், தமிழ் நாட்டில் வேறு ஒரு கட்சியின் ஆட்சி இருந்தது. அது உங்களுக்கு தெரியும். 

அப்போது, கேரள மாநிலத்தின் பினராயி விஜயன் போல, ஒரு முதலமைச்சர் நமது மாநிலத்திற்கு இல்லையே என்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் ஒரு ஏக்கத்தோடு சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அதை ஊடகங்கள்கூட எழுதியது. 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்தபோது உள்ளபடியே சொல்கிறேன். 

என்னுடைய செயல்பாடுகளுக்கு, முன்னுதராணமாக உங்களுடைய முதலமைச்சர் பினராயி விஜயனுடைய செயல்பாடுகளை தான் நான் கையில் எடுத்தேன். 

குறிப்பாக, கொரோனா தொற்று நோயை எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை உங்கள் மாநிலத்தினுடைய முதலமைச்சர் பினராயி விஜயனின் வழிகாட்டுதல்படிதான் அந்தப் பணியை நிறைவேற்றினேன் என்பது முக்கியம். இதுதான் எனக்கு ஒரு பெரிய பெருமை. 

கேள்வி:-தமிழகத்தில் சி.பி.எம். கட்சியும் தி.மு.க.வும் கூட்டணி கட்சிகள். இந்த நட்பு ஆட்சியிலும் கட்சியிலும் எப்படி இருக்கிறது? 

பதில் : எங்களுடைய இரு கட்சிகளுக்கும் இடையில் இருப்பது வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமல்ல. அது ஒரு கொள்கை கூட்டணி, லட்சியக் கூட்டணி. எனவே நாங்கள் இணக்கமாகவே இருக்கிறோம். 

தி.மு.க. ஆட்சிக்குத் தேவையான, ஆரோக்கியமான ஆலோசனைகளை சி.பி.எம்.-யை பொறுத்தவரையும் அக்கட்சியினுடைய தலைவர்கள் எங்களுக்கு அவ்வப்போது அறிக்கைகளாக கொடுக்கிறார்கள். 

தொலைபேசி மூலமாக எங்களுக்கு சொல்கிறார்கள். ஏன் நேரிலும் எங்களை பார்த்து இப்பிரச்சினைகள் எல்லாம் இருக்கிறது.

இப்படி செய்ய வேண்டும் என்று கருத்துகளை சொல்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், நானும் சில விஷயங்களை அவர்களோடு நேரடியாக தொடர்பு செய்துகொண்டு இருக்கிறோம். 

அதையும் தாண்டி, பல கருத்துகளை சி.பி.எம். அதிகாரபூர்வமான பத்திரிகையான "தீக்கதிர்" பத்திரிகையில், அவ்வப்போது ஆட்சியில் இருக்கக்கூடிய சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். அதையெல்லாம் உடனுக்குடன் சரி செய்கிறோம். 

ஆக எங்களுடைய கொள்கை கூட்டணி, ஆரோக்கியமாக தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இது தொடரும்'.
*

Share this story