'வழிபாட்டுக்கு வாழ்த்து சொல்லிட்டு போங்க' : முதல்வர் ஸ்டாலினுக்கு, சீமான் காட்டமான கேள்வி

By 
seeman3

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மதத்தினரின் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்கிறார், ஆனால், இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த விவகாரம் விவாதப்பொருளாகி உள்ளது. அண்ணாமலையின் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி பதில் அளித்தார். அப்போது, திமுகவைப் பொருத்தவரை சமூக நீதிதான் முக்கியம், அனைத்து சமுதாயமும், அனைத்து மதத்தினரும் ஒன்றாக இருக்க வேண்டும், எந்த கடவுளுக்கும் எதிராக நாங்கள் செயல்படுவதில்லை என கூறினார்.

எனினும் இந்த விவகாரம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எம்மதமும் சம்மதம் என சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்திக்கு ஏன் வாழ்த்து தெரிவிக்கவில்லை? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக சீமான் மேலும் கூறியதாவது:-

அதுக்கும் போகாதீங்க... இதுக்கும் போகாதீங்க... அப்படி செய்தால் இதுக்கு வாழ்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திடீர்னு தேர்தல் வரும்போது "நானும் இந்துதான், எங்கள் கட்சியில் 90 விழுக்காடு இந்துதான்" என சொல்வது நானா? நீங்களா? எதுக்கு அப்ப சொல்றீங்க?

90 விழுக்காடு உங்க கட்சியில் இந்துதானே, அவர்களின் பண்டிகைக்கு அவர்களின் வழிபாட்டுக்கு வாழ்த்து சொல்லிட்டு போங்க.

இதே விநாயகர் சதுர்த்தி... அடுத்த வாரம் தேர்தல்னா... நீங்கள் வாழ்த்து சொல்வீர்களா மாட்டீர்களா? எம்மதமும் சம்மதம்னு சொல்றீங்க... ஆனால் இந்து மதம் மட்டும் ஏன் உங்களுக்கு ஏற்புடையதல்ல? இவ்வாறு சீமான் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

Share this story