ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ்தான் உத்தரவாதம் : பிரதமர் மோடி விளாசல்..

By 
hima2

இமாச்சல பிரதேச மாநிலத்தில் வரும் 12ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆளும் பாஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இத்தேர்தலில் ஆம்ஆத்மியும் புதிதாக களம் காண உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

"காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநிலத்திற்கு "துரோகம்" செய்தது. "எதிரியாகவும்" இருந்தது. 2017 ஆம் ஆண்டு வரை மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும், நான் பிரதமரான பிறகு காங்கிரஸ் மாநில முன்னேற்றத்தைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதால், மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருப்பது அவசியம்.

காங்க்ரா பகுதி சக்தி பீடங்களின் நிலம், இந்தியாவின் நம்பிக்கையாகவும் இறை யாத்திரை நிலமாக காங்க்ரா விளங்குவதாகவும், இமாச்சல பிரதேசத்திற்கு நிலையான மற்றும் வலுவான அரசாங்கம் தேவை.

மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி என்பது போல் இரட்டை எஞ்சின் ஆற்றலையும் பெற்றால் தான் சவால்களையும் முறியடித்து புதிய உயரங்களை இமாச்சல் பிரதேச மாநிலம் எட்டும். ஊழல் மற்றும் மோசடிகளுக்கு காங்கிரஸ் தான் உத்தரவாதம் அளிப்பார்கள்.

காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் அதை விரும்பவில்லை. இப்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட இந்த இரண்டு மாநிலங்களும் வளர்ச்சி அடைந்ததாக எந்த செய்தியும் வரவில்லை.

பா.ஜ.க.வுக்கு, நாடு மற்றும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே விரிவான முன்னேற்ற அடைய முடியும்" என்று பிரதமர் மோடி கூறினார்.

Share this story