ஊழல் வழக்கு : பெண் அதிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை 

By 
chir

அர்ஜென்டினாவின் துணை அதிபராக கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை தொடர்ந்து 2 முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.

அதிபராக இருந்தபோது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், பொதுப்பணிக்கான ஒப்பந்தங்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு செய்ததாகவும் கிறிஸ்டினா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவர்மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வரும் நிலையில் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடந்தது. இந்நிலையில், இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை குற்றவாளியாக அறிவித்தார்.

இந்த வழக்கில் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் கிறிஸ்டினா பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

அர்ஜென்டினாவில் துணை அதிபர் ஒருவர் பதவியில் இருக்கும்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றது இது முதல் முறை ஆகும்.
 

Share this story