துணை முதலமைச்சர் உதவியாளர் கைது; அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை..

By 
asst

டெல்லியில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்த துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. சி.பி.ஐ. சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

மேலும், கடந்த மாதம் சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில், டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியாவின் உதவியாளர் தேவேந்திர சர்மாவை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.

அவரிடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வாக்குமூலம் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மணீஷ் சிசோடியா கூறுகையில் மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை தேதேந்திர சர்மாவை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பா.ஜ.க. உள்ளது. தேர்தலைப் பார்த்து அக்கட்சி பயப்படுகிறது என குற்றம்சாட்டினார்.

Share this story