வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும் : தேனியில், முதல்வர் ஸ்டாலின் பேச்சு

By 
theni

தேனி ஊஞ்சாம்பட்டியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 10,427 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

இயற்கை எழில் சூழ்ந்த தேனி மாவட்டத்துக்கு வருகை தந்தது மகிழ்ச்சியளிக்கிறது. வைகை அணை, மேகமலை, வெள்ளிமலை போடிமெட்டு, சோத்துப்பாறை, கும்பக்கரை அருவி என இயற்கை எழில் கொஞ்சும் அளவில் உள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் தேனி மாவட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 1.1.1997 முதல் செயல்பட்டு வருகிறது. 

1989ம் ஆண்டு அரசு தோட்டக்கலைக் கல்லூரி பெரியகுளத்தில் கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதேபோல் 2001ம் ஆண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் 1999ம் ஆண்டு உழவர்சந்தை ஆகியவை கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. 

மேலும், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை 50 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கட்டி முடிக்கப்பட்டது.

விவசாயிகளின் நீண்ட கால கனவான பி.டி.ஆர். கால்வாய், 18ம் கால்வாய் திட்டம் தி.மு.க. ஆட்சி காலத்திலேயே கொண்டு வரப்பட்டது. 

கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி திண்டுக்கல் பெரியசாமி என்று அழைக்கப்பட்டு வந்தார். தற்போது அவர் தேனி பெரியசாமி என அழைக்கும் அளவுக்கு தேனீ போல் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார்.

இதேபோல், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வருகிற 7-ந் தேதியுடன் தி.மு.க. அரசு பதவியேற்று ஒரு வருடம் முடியப்போகிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக, உடனடியாக மக்களை சந்திக்க முடியவில்லை. பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி திராவிட மாடல் அரசாக செயல்பட்டு வருகிறோம். மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன்.

மக்களுக்கான திட்டங்களை அவர்களுக்கு உண்மையில் கொண்டு சேர்ப்பதே திராவிட மாடல் அரசு. வளர்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அரசின் திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் விருப்பமாகும். இதனை அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரையாக அல்ல, ஆலோசனையாக அல்ல, ஆணையிட்டு கூறி வருகிறேன்.

இன்று 10,427 பேருக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் முகத்தில் புன்னகையை பார்க்கிறேன். 

பேரறிஞர் அண்ணா சொன்னது போல ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பதே இந்த ஆட்சியின் நோக்கமாகும்.

கடந்த ஓராண்டில் எண்ணற்ற பலத் திட்டங்களை செய்து முடித்துள்ளேன். 10 வருடம் ஆட்சியில் இருந்தால் என்னென்ன திட்டங்கள் செய்து முடிக்க முடியுமோ அவை அனைத்தும் ஓராண்டில் செய்துள்ளேன். தேர்தல் அறிக்கையில் கூறிய இன்னும் சில திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. அவை விரைவில் நிறைவேற்றப்படும்.

தமிழகத்தில் எனது தலைமையிலான தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா தலைவிரித்தாடியது. 

தீவிர நடவடிக்கை மேற்கொண்டதன் பலனாக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 91 சதவீதம் பேர் முதல் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவாரணத் தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 

ஆட்சி பொறுப்பேற்றவுடன் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 கொரோனா நிவாரணத் தொகை வழங்கப்பட்டது' என்றார்.
*

Share this story