'இரட்டை இலை சின்னம்' விவகாரம் : சசிகலா அதிரடி பேச்சு
 

By 
vksasikala

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே கீழ்ப்படியில் நிற்பார்கள். அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அ.தி.மு.க.வில் தற்போது இல்லை.

இது அனைத்திற்கும் கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ஜ.க. அலுவலக வாசலில் காத்திருந்தது குறித்து கேட்கிறீர்கள்.

அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படாது. அ.தி.மு.க.வில் எப்போதும் தொண்டர்கள் எண்ணப்படிதான் முடிவு எடுக்கப்படும். எப்போதுமே 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது. அதுபோன்று முடிவெடுக்கக் கூடிய கட்சி தி.மு.க.தான்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு முடிவு எடுக்க முடியும். அ.தி.மு.க. குடும்பம் என்பது மிகப்பெரியது. அ.தி.மு.க. குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவு. நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விட மாட்டேன்.

நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நான் எதுவும் கூற முடியாது.

மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அ.தி.மு.க. சிதறுண்டு இருப்பதற்கு காரணம் பா.ஜ.க.வா என்று கேட்கிறீர்கள். நாம் அடுத்தவரை பற்றி குறை கூற தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை யாராலும் ஏதாவது செய்ய முடியுமா? என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டு விட்டு இருவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் வேண்டுகோள்.

தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்ட ஸ்டாலின் அந்த சாவியை தற்போது தொலைத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
 

Share this story