டெல்லி பயணத்தை பாதியில் முடித்து, சென்னை திரும்பினார் ஈபிஎஸ்..
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு நடைபெறும் பிரிவு உபசார விழாவில் பங்கேற்க அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பா.ஜனதா மேலிடம் அழைத்தது.
அந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டு சென்றார். அசோகா ஓட்டலில் நடைபெற்ற பிரிவு உபசார விழாவிலும் கலந்து கொண்டார்.
டெல்லியில் எடப்பாடி பழனிசாமி 4 நாட்கள் தங்கியிருக்க திட்டமிட்டு இருந்தார்.
அதாவது நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ள புதிய ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவும், முக்கியமாக டெல்லியில் தங்கியிருக்கும் நேரத்தில் மோடி, அமித்ஷாவை சந்தித்து பேசவும் திட்டமிட்டு இருந்தார்.
இந்த சந்திப்பின் போது அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை, ஓ.பன்னீர் செல்வம் விவகாரம் ஆகியவற்றை எடுத்து சொல்லி பெருவாரியான நிர்வாகிகள் ஆதரவு தனக்கு இருப்பதை சுட்டிக்காட்டி, பா.ஜனதா ஆதரவையும் பெற்றுவிட திட்டமிட்டு இருந்தார்.
ஆனால், தனது பயண திட்டத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு இன்று சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மோடி, அமித்ஷா இருவரையும் சந்திக்காமலேயே எடப்பாடி பழனிசாமி திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
*