ஓபிஎஸ் உடன் திரைப்பட இயக்குநர் பாக்யராஜ் சந்திப்பு; அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என பேட்டி

By 
bhagya

திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் சென்னையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது: 

தமிழக நலனை நினைத்தே எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தினார்கள்.

மக்களுக்கு எல்லா விஷயங்களை எம்ஜிஆர் நல்லபடியாக செய்தார். ஜெயலலிதாவும் அவரது பாதையில் நல்லது செய்து வந்தார்.

அதன் பின்னர் ஒபிஎஸ் வந்தார். அதற்கு பிறகு எடப்பாடி வந்தார். திருஷ்டி பரிகாரம் போல் கட்சிக்கு சோதனை வந்துள்ளது.

அதிமுகவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். நானும் அதையே சொல்லி வருகிறேன்.

எம்ஜிஆர் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன். எல்லாரும் ஒன்று சேருவார்கள். எல்லாம் நல்லபடியாக வரும். கொஞ்ச காலம் பிடிக்கும். மீண்டும் எல்லாரும் ஒன்றுபட்டு பழையபடி இந்த கட்சி பலம் பெற நானும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இதற்காக முறையாக கட்சியில் இணைந்து செயல்படுவேன்.

தேவை ஏற்பட்டால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Share this story