முன்னாள் முதலமைச்சர்-எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் அடிதடி, மோதல்..

By 
jhar

ஜார்க்கண்டில் சத் பூஜையை முன்னிட்டு சித்கோரா நகரில் சூரிய கோவிலில், பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் முன்னாள் முதல்-மந்திரியான ரகுபர் தாசின் தொண்டர்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், பா.ஜ.க.வின் முன்னாள் உறுப்பினராக இருந்து பின்னர், தனியாக பிரிந்து சென்ற எம்.எல்.ஏ. சூரியா ராய் என்பவர், தாசின் தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு அருகே பக்தர்களின் வசதிக்காக மற்றொரு முகாம் ஒன்றை அமைத்து உள்ளனர்.

இதனால், இரு தரப்பு தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஒருவருக்கொருவர் மோதி கொண்டனர். சண்டை முற்றியதில் முகாமை கிழித்தும், நிகழ்ச்சியில் போடப்பட்டு இருந்த நாற்காலிகளை தூக்கி வீசியெறிந்தும், பந்தலை சேதப்படுத்தியும் மோதலில் ஈடுபட்டனர்.

இதில், தொண்டர்கள் உள்பட பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, வன்முறை பரவி விடாமல் தடுக்கும் வகையில் சம்பவ பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதல் அடங்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

Share this story