பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது..?

By 
imran5

பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது, கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது.

இதற்கு இம்ரான்கானின் மோசமான நிர்வாகம் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்ததால் எதிர்கட்சிகளின் ஆதரவுடன் புதிய பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.

இந்தநிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த பொதுகூட்டத்தில் இம்ரான் கான் நீதிபதி, மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதனால் அவர் மீது தீவிரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அவருக்கு கைது வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இம்ரான்கான் தனது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக பெடரல் ஏஜென்சி விசாரணை நடத்தியது.

இதில் இம்ரான்கான் கட்சி 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கி நிதி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இம்ரான் கான் எந்தநேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை பாகிஸ்தானில் நிலவுகிறது. அவர் வீட்டு காவலில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் பாகிஸ்தானில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது. அவரது கட்சி தொண்டர்கள் இம்ரான்கான் வீடு முன்பு குவிந்து வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இம்ரான்கான் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். தன்னை 4 பேர் கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் அவர்கள் பெயர் அடங்கிய வீடி யோவை வெளியிடுவேன் என்றும் பரபரப்பான தகவலை தெரிவித்து உள்ளார்.

இம்ரான்கான் இதற்கு முன்பும் பலமுறை தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story