ஓபிஎஸ் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்? : உதயகுமார் ஆவேசம்

By 
udhaya1

தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று பல்வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தேனியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது :

5 மாவட்ட மக்களின் நீராதார பிரச்சினையை தீர்த்த பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடும் தேனி மாவட்ட மக்கள் விசுவாசமானவர்கள். ஆனால், இங்கு ஓ.பி.எஸ். போன்ற துரோகிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. 

அ.தி.மு.க.வுக்கு களங்கத்தை ஏற்படுத்திய ஓ.பி.எஸ்.சின் சிரிப்பு துரோக சிரிப்பு. அவர் சுயநலத்துக்காக போராடியவர். அவருக்கு எந்த கட்சியிலும் வேலையில்லை. அவர் எங்கு செல்லப்போகிறார்? என தெரியவில்லை. 

ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், அ.தி.மு.க. தொண்டர்களின் உழைப்பால் தான் வெற்றி பெற்றார். 

தற்போது மீண்டும் அவர் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றால், நான் பொதுவாழ்வில் இருந்து விலக தயாராக இருக்கிறேன். 

எதிர்க்கட்சியை முடக்கும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளை கடுமையாக கண்டிக்கிறேன். 

இங்கு கூடியிருக்கிற கூட்டத்தை கட்டுப்படுத்த மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாரா? அல்லது ஓ.பி.எஸ். தூண்டுதலா? என தெரியவில்லை. 

மக்கள் ஆதரவு ஓ.பி.எஸ்.சுக்கு இல்லாததால், அவர் தேனியை காலி செய்து மாலத்தீவுக்கு சென்று விடுவார். 

அ.தி.மு.க.வில் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள 99 சதவீதம் பேர் ஆதரவு அளித்தனர். 

ஆனால், ஓ.பி.எஸ். மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டார். அவருடன் கடைசியில் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பார்கள். 

அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் தொண்டர்களின் கண்ணில் ரத்தம் வரவழைக்கிறது. உங்கள் (ஓ.பி.எஸ்.) வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்? 

ரவுடிகளுடன் அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு வந்தவர்கள் அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை திருடிச் சென்றனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோது கொங்கு மண்டலத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்தன. 

ஆனால், ஓ.பி.எஸ். 3 முறை முதலமைச்சராகவும், ஒருமுறை துணை முதலமைச்சராகவும் இருந்துள்ளார். 

ஆனால், தேனியில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் செயல்படுத்தவில்லை' என்றார்.
*

Share this story