அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமையாக எண்ணுகிறேன் : கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 15-ந்தேதி இரவு கோவை வந்தார். நேற்று கமல்ஹாசன் தனியார் திரையரங்கில் நடந்த விக்ரம் படத்தின் 100 நாள் வெற்றி விழாவில் பங்கேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து இரவு ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். இன்று காலை கோவை ராஜவீதி பகுதியில் உள்ள துணி வணிகர் சங்க மேல்நிலைப் பள்ளிக்கு கமல்ஹாசன் வந்தார். அங்கு படிக்கும் மாணவிகளுடன் நடிகர் கமல்ஹாசன் கலந்துரையாடினார்.
பின்னர் அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்து கொண்டார். அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:-
நான் படித்த பள்ளியில் நிறைய வசதி இருந்தும் என்னால் பள்ளி படிப்பை தொடர முடியவில்லை.
ஆனால் நீங்கள் வசதிகளின்றி பயில்வது மகிழ்ச்சியளிக்கிறது. இப்பள்ளியில் கழிவறை கட்டுவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொண்டு வந்தோம். ஆனால் அதற்குள்ளாக அரசே முன்வந்து கழிவறை கட்ட உள்ளது.
அரசு செயல்படுவதற்கு நான் ஊக்கியாக இருந்ததை நினைத்து பெருமையாக எண்ணுகிறேன். இந்த பள்ளியில் கட்டி கொடுக்க இருந்த கழிவறையை கெம்பட்டி காலனி பகுதியில் கட்டி கொடுக்க உள்ளோம்.
எனக்கு இங்கு அனுமதி கொடுத்த அரசு அலுவலர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனை நான் தமிழனின் கடமையாய் நினைத்து செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.