அதிமுக பொதுக்குழுவில், 23 தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றலாம் : விடிய விடிய நடந்த விசாரணையில் நீதிபதிகள் உத்தரவு
இன்று 23-ந்தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி நேற்று உத்தரவிட்டார். அதன்படி, இன்று அதிமுக பொதுக்குழு பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் கூடுகிறது. போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் நேற்று இரவு மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
சென்னை அண்ணாநகரில் உள்ள நீதிபதி துரைசாமி இல்லத்தில் நள்ளிரவில் விசாரணை நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜகோபால், விஜய் நாராயண் ஆஜராகினர்.
ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அரவிந்த் பாண்டியன், திருமாறன் ராஜலட்சுமி ஆகியோர் ஆஜராகினர்.
இந்நிலையில், விடிய விடிய நடந்த விசாரணைக்குப் பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்த தடை இல்லை என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்றலாம்.
மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். ஆனால், எந்த முடிவும் எடுக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.
விசாரணை நடைபெற்ற நீதிபதி வீட்டின் முன், தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
*