ஜெயிலில் இருப்பது போல உள்ளது : கோத்தபய ராஜபக்சே புலம்பல்

 

By 
jail

இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு மற்றும் சிங்கப்பூருக்கு தப்பி சென்றார். சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த 11-ந் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார்.

அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது. தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு ஓட்டலில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

இதனால் ஓட்டல் அறைக்குள்ளேயே அடைந்து கிடக்கிறார். மேலும் அரசியல் நடவடிக்கைளில் ஈடுபடக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரமிக்க பதவியில் இருந்த கோத்தபய ராஜபக்சே ஒரு அறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலையில் உள்ளார். ஓட்டல் அறைக்குள்ளேயே இருப்பது ஜெயிலில் உள்ளது போல் இருப்பதாக அவர் உணர்கிறார்.

அவர் நாடு திரும்ப முடியாததால் விரக்தியில் புலம்பி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தாய்லாந்தில் நவம்பர் மாதம் வரை தங்கி இருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதிலும் கோத்தபய ராஜபக்சே அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்பலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

முன்பு அவர் ஆகஸ்டு 24-ந்தேதி (நாளை) நாடு திரும்ப உள்ளதாக கூறப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே அமெரிக்காவிடம் குடியேற நிரந்தரமாக குடியுரிமை பெற கோத்தபய ராஜபக்சே விண்ணப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோத்தபய ராஜபக்சே அமெரிக்காவுக்கு வந்தால், அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்குமூலம் கைது செய்யப்படலாம் என்று புலப்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, 2019-ம் ஆண்டு கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக லிபோர்னியா நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்து இருந்தேன். நான் இலங்கையில் கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக இந்த வழக்கை தாக்கல் செய்தேன்.

கோத்தபய ராஜபக்சே மீண்டும் அமெரிக்கா திரும்பினால் வழக்கு தொடர்பான செயற்பாடுகள் தொடங்கும் என்றார்.
 

Share this story