ஆண்கள் 3 திருமணம் செய்துகொள்ள சட்டம் : அமைச்சர் ரோஜா தகவல்

By 
roja1

அமராவதியை ஆந்திராவில் தலைநகரமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக ஆளுங்கட்சிக்கும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் ஆளுங்கட்சிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

அமைச்சர் ரோஜா கார் மீது ஜனசேனா கட்சியினர் கல் வீசியது சம்பந்தமாக, நடிகர் பவன் கல்யாணுக்கும், அமைச்சர் ரோஜாவுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நடந்து வருகிறது.

இந்த நிலையில், கட்சி கூட்டத்தில் பேசிய நடிகர் பவர் கல்யாண் பணம் வாங்கிக்கொண்டு பேசுவதாக கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என ஆவேசமாக கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் ரோஜா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு ஆந்திராவில் உள்ள 175 சட்டமன்றத் தொகுதிகளிலும் நிறுத்த கூட ஆட்கள் இல்லை. இதனால் அவர் சந்திரபாபு நாயுடு உடன் சேர்ந்து கொண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்.

கடந்த 2019-ம் ஆண்டு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்தார்.

அப்போது அவரை சந்திரபாபு நாயுடு திருப்பி அனுப்பினார். அப்போது வாய் திறந்து பேச முடியாத பவன் கல்யாண் தன்னை பொதுக்கூட்டத்தில் பேச முடியாதவாறு திருப்பி அனுப்பியதாக கூறுகிறார். அப்போது கஷ்டப்படாத நீங்கள் இப்போது ஏன் கஷ்டப்படுகிறீர்கள். பவன் கல்யாண் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் ஆந்திராவில் உள்ள ஆண்கள் 3 திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சட்டம் கொண்டு வருவார்.

ஆந்திர மக்கள் அவரை நம்ப தயாராக இல்லை. எங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் ஆந்திர மக்கள் வாக்களித்து 155 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story