கடுமையான போராட்டம் நடத்துவோம் : அன்புமணி ராமதாஸ் பேச்சு

By 
anpu

தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூரில் இன்று நடைபயணம் மேற்கொண்ட அன்புமணி ராமதாஸ் கூறியதாவது :                                                                                        

தருமபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி 3 நாட்கள் நான் நடைபயணத்தை தொடங்கி இருக்கிறேன். 

இன்று 3-வது நாளாக தொடங்கி உள்ளேன். நடைபயணத்தின் போது பொதுமக்களிடம் காவிரி உபரி நீர் திட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டிசை வழங்கியுள்ளேன்.  திட்டம் பற்றி நான் மக்களுக்கு எடுத்து கூறினேன். தமிழ்நாட்டில் மழை குறைவாக பெய்யும் மாவட்டம் தருமபுரி. 

இந்த மாவட்டத்தில் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்து வருகிறார்கள். காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் மின்மோட்டார் மூலம் தருமபுரி மாவட்ட ஏரி, குளங்களுக்கு நிரப்ப வேண்டும். 

ஆடிப்பெருக்கு விழாவின் போது காவிரி ஆற்றில் இருந்து 16 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. தருமபுரி மாவட்டத்திற்கு வெறும் 3 டி.எம்.சி. தண்ணீர் மட்டும் தான் ஏரி, குளங்களுக்கு நிரப்ப தேவைப்படும். மேட்டூர் அணைக்கு பிறகு எந்த அணையும், தடுப்பு அணையும் கிடையாது. கடந்த 7 முறை ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசிடம் மனு கொடுத்தோம். 

ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கேட்டால் நிதி இல்லை என்று கூறியுள்ளார்கள். தற்போது தி.மு.க. அரசிடம் மனு கொடுத்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். 

சாதி, மதம் தாண்டி நாம் ஒற்றுமையாக நின்று தருமபுரி மாவட்டத்திற்கு காவிரி உபரி நீர் திட்டத்தை கொண்டு வர வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 18 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். 

இந்த திட்டம் நிறைவேற்றினால் 15 லட்சம் மக்கள் பயன்படுவார்கள். 

தமிழக அரசிடம் இந்த காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற கோரி மீண்டும் மனு கொடுக்கிறோம். 

அப்படியும் இந்த திட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான போராட்டம் நடத்துவோம். காவிரி நீரை கொண்டு வர பா.ம.க. 30 ஆண்டுகள் போராடியதால் தான் தற்போது குடிக்க தண்ணீர் கிடைத்துள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் குடிநீர் கொண்டு செல்ல 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்து நிறைவேற்றியுள்ளார். 

ஆனால் தருமபுரி மாவட்டத்திற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எங்களது இந்த திட்டம் கொண்டு வந்ததால் அடுத்த 50 ஆண்டுகள் வரை பிரச்சினை இருக்காது' என்றார்.
*

Share this story