மின் கட்டண உயர்வு குறித்து, அமைச்சர் செந்தில்பாலாஜி  விளக்கம்

By 
electricity

மின் கட்டண உயர்வு குறித்து கரூரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் 100 யூனிட்டிற்குள்ளாக மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் ஒரு கோடி பேர் வரை உள்ளனர். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. 101 முதல் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 63 லட்சத்து 35 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 27 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

இது ஒருநாளைக்கு ஒரு ரூபாய்க்கும் குறைவான கட்டண உயர்வாகும். 201 முதல் 300 யூனிட் வரை பயன்படுத்துபவர்கள் 36 லட்சத்து 25 ஆயிரம் விவசாயிகளுக்கு 72 ரூபாய் 50 பைசா மட்டுமே கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

301 முதல் 400 யூனிட் வரை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 82 ஆயிரம் பேர். இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு 147 ரூபாய் 50 பைசா என்ற அளவில் கட்டண உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டு உபயோக மின் கட்டணத்தைப் பொறுத்தவரை, கர்நாடகா, குஜராத் மாநிலங்களை விட மிக குறைந்த மின் கட்டணமே தமிழகத்தில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

குறு சிறு நடுத்தர நிறுவனங்களைப் பொறுத்தவரை, 2 லட்சத்து 26 ஆயிரம் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடிய மின்சாரத்துக்கு 50 பைசா கட்டணம் மட்டுமே மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்த நிலையில் உள்ள 19 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு வணிக நுகர்வு மின்சாரம் பயன்படுத்துபவர்கள் இவர்களுக்கும் 50 பைசா மட்டும்தான் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக் காலங்களில் விட்டுச் சென்ற கடன் சுமை காரணமாக மின்சார வாரியம் இழுத்து மூடக்கூடிய சூழ்நிலை இருந்தது. திமுக அரசு ரூ.9 ஆயிரம் கோடி அளவிற்கு வழங்கப்பட்ட நிதி ஆதாரத்தின் காரணமாகவே மின்சார வாரியம் இயங்கி வருகிறது.

மின் நுகர்வோர்கள் தமிழக அரசிற்கும், மின்சார வாரியத்திற்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Share this story