ராகுல் நடைபயணம் மக்களுக்காக இல்லை : சீமான்

By 
natai

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது குடும்பத்தினருடன் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி மூலவர், சண்முகர், பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தார். பின்னர் தனது மகனுக்கு முடி காணிக்கை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் நடைபயணம் அவரது உடலுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் புத்துணர்வை கொடுக்குமே தவிர மக்களுக்காக இல்லை. தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்ற உத்தரவு இருந்தாலும் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை.

எனவே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். குஜராத் மாடல், டெல்லி மாடல் என்பதை போல் திராவிட மாடல் என்று கூறுகிறார்கள். திராவிட மாடல் என்று சொல்வதை விட தமிழ்மாடல் என்று சொன்னால் ஆறுதலாக இருக்கும். ஜி.எஸ்.டி., நீட், சி.ஏ.ஏ. போன்ற திட்டங்களுக்கு தொடக்கமே காங்கிரஸ் கட்சிதான்.

இதனால் தான் காங்கிரஸ் கட்சியால் எதிர்த்து பாராளுமன்றத்தில் பேச முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார். அப்போது போதைபொருட்கள் பயன்பாடு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு சீமான் பதில் அளிக்கையில்,

குட்கா, கஞ்சா, ஹெராயின் போன்றவை போதை பொருட்கள் என்பதை முருகன் மீது ஆணையாக ஒத்துக்கொள்கிறேன். அதுமட்டும் தான் போதைப்பொருட்களா?. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுபானங்கள் கோவில் தீர்த்தமா? அதனையும் தடை செய்ய வேண்டியதுதானே என்றார்.

Share this story