இலங்கை, முன்னாள் அதிபருக்கு ரூ.10 கோடி அபராதம் : கோர்ட் அதிரடி தீர்ப்பு 

By 
srisena

இலங்கையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி ஈஸ்டர் தினத்தில் 3 கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் 3 சொகுசு ஓட்டல்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன.

இலங்கை மட்டும் இன்றி ஒட்டுமொத்த உலகையும் அதிரவைத்த இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் பலர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா முன்கூட்டியே உளவுத் தகவல் அளித்தும், அதை தடுக்க தவறியதாக இலங்கையின் அப்போதைய அதிபர் சிறிசேனா மற்றும் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதுமட்டும் இன்றி ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு குறித்து விசாரிப்பதற்காக சிறிசேனாவால் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற விசாரணைக்குழுவும் பயங்கரவாத தாக்குதலை தடுக்க சிறிசேனா தவறிவிட்டதாக குற்றம் சாட்டியது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை சிறிசேனா திட்டவட்டமாக மறுத்து வருகிறார்.

எனினும் இந்த விவகாரத்தில் சிறிசேனா மற்றும் அவரது அரசில் பணியாற்றிய மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் மீது குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சிலர் அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டின் 7 நீதிபதிகளை கொண்ட அமர்வு தனது தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பயங்கரவாத தாக்குதல் குறித்து இந்தியாவிடம் இருந்து நம்பகமான தகவல் கிடைத்தும், நாட்டின் மீதான தாக்குதலை தடுப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னாள் அதிபர் சிறிசேனா இலங்கை பணத்தில் ரூ.10 கோடியை தனது சொந்த நிதியில் இருந்து இழப்பீடாக வழங்க வேண்டும்.

அதேபோல் முன்னாள் தலைமை போலீஸ் அதிகாரி பூஜித் ஜெயசுந்தரா, உளவுத்துறை முன்னாள் தலைவர் நிலந்தா ஜெயவர்த்தனே ஆகியோர் தலா ரூ.7.5 கோடியும், பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் ஹெமாசிறி பெர்ணாண்டோ ரூ.5 கோடியும் இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த இழப்பீட்டை 6 மாதகாலத்துக்குள் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Share this story