தம்பித்துரை சார்.. இதென்ன சட்டத்துறையா? செட்டப் துறையா? : மருது அழகுராஜ் கேள்வி
'தம்பித்துரை சார்.. இவ்வளவு கெஞ்சி கேக்கிறதால, அண்ணா திமுக அதிபர்னு கூட அடிச்சு அனுப்புறேன்' என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும், அதிமுக கொள்கை பரப்புச் செயலாளருமான கவிஞர் மருது அழகுராஜ் வெளியிட்டுள்ள எள்ளல் அறிக்கை வருமாறு :
ஹெலோ.. வணக்கம் தம்பித்துரை சார்...
நாங்க சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து பேசுறோம்..
'ஒரே தேசம் ஒரே தேர்தல்' குறித்து நடக்க இருக்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எம்.பி.- எம்.எல்.ஏக்கள் உள்ள கட்சிகளுக்கெல்லாம் அழைப்புக் கடிதம் அனுப்புறோம்.
அந்த வகையில், நீங்க இருக்கிற கட்சிக்கும் கடிதம் அனுப்பனும், கொஞ்சம் முகவரி சொல்றீங்களா.?
அப்படியா, எழுதிக்கோங்க; எடப்பாடி பழனிச்சாமி, பொதுச்செயலாளர், அண்ணா திமுக. தலைமை அலுவலகம், ஒளவை சண்முகம் சாலை, சென்னை.
பொதுச்செயலாளர் என்கிறதை மட்டும் கொஞ்சம் அழுத்தி அடிங்க..
என்ன தம்பிதுரை சார்.. எடப்பாடிக்கு இடைக்கால பொதுச்செயலாளர் பதவியே கேள்விக்குறியாகி, உச்ச நீதிமன்றத்தில் நிக்குது. நீங்க என்னடான்னா.. பொதுச்செயலாளருன்னு போடச் சொல்றீங்க.. இது நீதிமன்றம் அவமதிப்பு ஆயிடுமே.
அதெல்லாம் ஒன்னும் ஆகாது, நீங்க போட்டு அனுப்புங்க, நாலு நாளைக்கு அதை வச்சு நாங்க அரசியல் பண்ணிக்கிறோம் ப்ளீஸ்.
ஓகே சார்.. இவ்வளவு கெஞ்சி கேக்கிறதால, அண்ணா திமுக அதிபர்னு கூட அடிச்சு அனுப்புறேன்.
எங்களுக்கு கஷ்டமர் சேட்டிஷ் பேக்சன்தான் முக்கியம் சார்..
இவ்வாறு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் கவிஞர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.